மண்ணுளி பாம்புகள் மட்டும் கடத்தப்படுவது ஏன்?
சென்னை: நாட்டில் சாரைப் பாம்பு, நல்ல பாம்பு, பச்சைப் பாம்பு என பலவகை பாம்புகள் உள்ள நிலையல் மண்ணுளி பாம்பை மட்டும் கடத்துவது ஏன் என்று சட்டசபையில் அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.
சட்டசபையில் இன்று வனத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு அமைச்சர் செல்வராஜ் பதிலளிக்கையில்,
கிண்டி பாம்புப் பண்ணையில் மண்ணுளி பாம்புகள் திருபட்டப்பட்டது குறித்து இங்கே உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அது வனத்துறைக்கு சொந்தமானதல்ல.
அதை மூத்த ஐஏஎஸ் அதிகாரி விஜயராகவன் தலைமையிலான குழு தான் பராமரித்து வருகிறது. வனத்துறைக்கு சொந்தமான சிறுவர் பூங்காவில் இருந்த இரு மண்ணுளி பாம்புகளும், வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்த 30 பாம்புகளும் பாதுகாப்பாகவே உள்ளன.
இந்த பாம்புகளைக் கடத்துவது குற்றம் என்று அறிவிக்கப்பட்டு இதுவரை 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 140 பேர் கைது செய்யப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து ரூ. 23 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்த மண்ணுளி பாம்புகளின் விஷேசம் என்ன என்று அதிமுக உறுப்பினர் ஜெயக்குமார் கேட்டார். அதை அவரை பரிசோத்தித்துப் பார்த்துக் கொள்ளட்டும் என்றார்.
அப்போது ஜெயக்குமார் எழுந்து, நாட்டில் சாரைப் பாம்பு, நல்ல பாம்பு, பச்சைப் பாம்பு என பலவகை பாம்புகள் உள்ள நிலையல் மண்ணுளி பாம்பை மட்டும் கடத்துவது ஏன் என்று தான் நான் கேட்டேன் என்றார்.
இதற்கு அமைச்சர், நீங்கள் பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று பதிலளித்தார். மேலும் அவர் கூறுகையில்,
ரூ.23.7 கோடி செலவில் 150 கிராமங்களில் உள்ள தரம் குன்றிய காடுகளில் 31,050 ஹெக்டேர் பரப்பில் காடு வளர்ப்பு பணி மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள இயற்கை வளங்களை முறையாக பராமரிக்க ரூ.636 கோடி மதிப்பில் ஒரு பெரிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜப்பான் நாட்டு சர்வதேச கூட்டுறவு கழகத்தின் வெளிநாட்டு உதவி பெற மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்டு தற்போது மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது.
அழிந்து வரும் அபாய கட்டத்தில் உள்ள நீலகிரி வரையாடு, பிணம் திண்ணி கழுகுகள், கடல் ஆமைகள், கடல் பசு ஆகியவற்றைப் பாதுகாக்க ரூ.20 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
யானைகள், காட்டு எருமைகள், மான்கள் அவை வாழும் இடங்களை விட்டு வெளியே வராமல் இருக்க 25 கிமீ நீளத்துக்கு யானை அகழிகள் அமைக்கப்படும்.
ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் ரூ.19 1/2 கோடி செலவில் பிச்சாவரம், முண்டந்துறை புலிகள் காப்பக பகுதி, அகத்தியர் நீர் வீழ்ச்சி ஆகிய இடங்களில் சுற்றுச்சூழல் சுற்றுலா பணிகள் மேற்கொள்ளப்படும்.
சென்னை அருகே பள்ளிக்கரணை நிலப்பகுதி தனித்தன்மை வாய்ந்த நன்னீர் ஈரநிலமாகும். இங்கு எண்ணற்ற பறவை இனங்கள் வந்து செல்கின்றன. இந்த பகுதிகள் ஆக்கிரமிக்கப்படும் சூழ்நிலையில் உள்ளது. இதை தடுக்க சுற்றுச்சுவர் கட்டப்படும் என்றார்.