பயிற்சி டாக்டர்களுக்கு உதவித் தொகை மீண்டும் உயர்வு
சென்னை: பயிற்சி டாக்டர்களுக்கான உதவித் தொகையை மீண்டும் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதலில் அறிவிக்கப்படதை விட சற்று கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஒரு அறிக்கை படித்தார்.
அதில், பயிற்சி மருத்துவர்களுக்கு ஏற்கனவே இருந்த ரூ. 4,500 என்பதை ஏற்கனவே ரூ. 6 ஆயிரமாக வழங்கப்படும் என்று அறிவித்ததற்கு மாறாக மாதம் ரூ. 7 ஆயிரமாக வழங்கப்படும்.
பட்டமேற்படிப்பு முதலாம் ஆண்டு மருத்துவர்களுக்கு ஏற்கனவே ரூ. 8 ஆயிரம் என்று இருந்ததை இனி ரூ. 15 ஆயிரம் என்றும், இரண்டாம் ஆண்டு மருத்துவர்களுக்கு ரூ. 8,500 என்று இருந்ததை ரூ. 16 ஆயிரம் என்றும், 3-ம் ஆண்டு மருத்துவர்களுக்கு ரூ. 9 ஆயிரம் என்று இருந்ததை ரூ. 17 ஆயிரம் என்றும் உயர்த்தி வழங்கப்படும்.
சிறப்பு முதுகலை படிப்பு படிக்கும் முதலாம் ஆண்டு மருத்துவர்களுக்கு ஏற்கனவே ரூ. 9,500 என்று இருந்ததை ரூ. 18 ஆயிரம் என்றும், இரண்டாம் ஆண்டு மருத்துவர்களுக்கு ஏற்கனவே ரூ. 10 ஆயிரம் என்பது ரூ. 19 ஆயிரம் என்றும், 3-ம் ஆண்டு மருத்துவர்களுக்கு ஏற்கனவே ரூ. 10 ஆயிரம் என்று இருந்தது. இனி ரூ. 20 ஆயிரம் என்று உயர்த்தி வழங்கப்படும்.
எம்.சி.எச். படிக்கும் மருத்துவர்களுக்கு ஏற்கனவே ரூ. 10 ஆயிரம் என்று இருந்தது. இனி ரூ. 18 ஆயிரம் என்றும் 5-ம் ஆண்டு மருத்துவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் என்று இருந்தது. ரூ. 19 ஆயிரம் என்றும் உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
நேற்று தங்களது காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை பயிற்சி டாக்டர்கள் திரும்பப் பெற்றனர். இதையடுத்து இன்று மீண்டும் உதவித் தொகை உயர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது.