செயற்குழுக் கூட்டத்திற்கு வர வேண்டாம் - 10 எம்.எல்.ஏக்களுக்கு ஜெ. தடை
அதிமுக செயற்குழு அவசர கூட்டம் நீலகிரி மாவட்டம், குன்னூர் உபாசி சாலையில் உள்ள விவேக் ஓட்டலில் நாளை பிற்பகல் 3 மணிக்கு கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெறுகிறது.
செயற்குழு கூட்டத்தில், இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவது குறித்தும், கூட்டணி தொடர்பாகவும் ஆலோசிக்கப்படவுள்ளது.
அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் செயற்குழு உறுப்பினர்களாக உள்ளனர். ஆனால் அவர்களில் 10 பேரை மட்டும் செயற்குழுக் கூட்டத்திற்கு வர வேண்டாம் என ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
ஜெவால் வர வேண்டாம் உத்தரவிடப்பட்டுள்ள பத்து எம்.எல்.ஏக்கள்...
பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், அனிதா ராதாகிருஷ்ணன், கோ.அரி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வி.பி.கலைராஜன், அருண்மொழித்தேவன், மகேந்திரன், துரைராஜ், சாமி, சின்னசாமி ஆகியோரே.
இவர்களில் ஓ.பன்னீர் செல்வம் சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருக்கிறார். நாளை காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பன்னீர் செல்வம் பேசவுள்ளார். எனவே இவரை வர வேண்டாம் என்று சொல்லியிருப்பதில் விசேஷம் இல்லை.
ஆனால் மற்ற 9 பேருக்கு ஏன் திடீர் தடை என்று தெரியவில்லை. ஒரு வேளை முக்கியமான விவாதத்தின்போது அதிமுக தரப்பில் சபையில் யாரும் இல்லாமல் போய் விடக் கூடாது என்பதற்காக பத்து பேரை மட்டும் உட்கார வைக்கலாம் என நினைத்து ஜெயலலிதா உத்தரவிட்டிருக்கலாம் என ஒரு கருத்து உள்ளது.
ஆனால் அப்படியெல்லாம் இல்லை, ஜெயலலிதா ஏதோ ஒரு திட்டத்துடன் இருக்கிறார். அவரது முடிவில் ஏதாவது மறைந்திருக்கலாம் என்று இன்னொரு தரப்பு கூறுகிறது.