சலுகைகள் கிடைத்தபின்னும் அரசு ஊழியர்கள் போராடுவது நல்லதல்ல - சூரியமூர்த்தி
நெல்லை: கடந்த ஆட்சியில் அரசு ஊழியர்கள் இழந்த சலுகைகளை பெற்றுள்ள நிலையில் அடிக்கடி போராட்டம் நடத்துவது நல்லது அல்ல என தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய தலைவர் சூரியமூர்த்தி தெரிவித்தார்.
நெல்லை வந்த சூரியமூர்த்தி நிருபர்களிடம் பேசுகையில்,
கடந்த ஆட்சியில் இழந்த பல சலுகைகளை பெற்றுள்ள நிலையில் அடிக்கடி போராட்டம் நடத்துவது நல்லது கிடையாது.
தமிழகத்தில் 13 லட்சத்து 30 ஆயிரம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், 5 லட்சத்து 40 ஆயிரம் ஓய்வூதியர்கள் உள்ளடங்கிய அரசில் சில குறைபாடுகள் தவிர்க்க முடியாதது. இதற்காக தனியார் முதலாளிகளை தொழிலாளர் எதிர்த்து போராடுவது போல அரசு ஊழியர்கள் போராட முடியாது.
சமூக அணுகுமுறை, பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்வு காண விரும்புகிறோம். சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு மிகப்பெரிய குறை ஏற்பட்டுள்ளதுபோல் ஒரு சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை.
25 ஆண்டுகாலமாக நிரந்தர பணி, ஊதியமின்றி இருந்தவர்களுக்கு பணி நிரந்தரம் செய்து, ஓய்வூதியம் வழங்கிய அரசுக்கு நன்றி பாராட்டுவது தான் நல்ல பண்பாடு.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில மாநாடு சென்னையில் அடுத்த மாதம் இறுதியில் நடக்கிறது. இதில் தமிழக முதல்வர், துணை முதல்வர், மத்திய, மாநில அமைச்சர்கள், 6 லட்சம் அரசு அலுவலர்கள் பங்கேற்கின்றனர் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications