புலிகள் முழுமையாக தோற்கவில்லை-ரம்புகவெல்ல
கொழும்பு: விடுதலைப் புலிகளுடனான ராணுவப் போர் முடிந்து விட்டாலும் கூட முழுமையாக அவர்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக கருத முடியாது என்று கூறியுள்ளார் இலங்கை பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் கெஹலிய ரம்புகவெல்ல.
இதுகுறித்து அவர் அளித்துள்ள தொலைக்காட்சிப் பேட்டியில், புலிகள் முழுமையாக தோற்கடிக்கப்பட்டு விட்டதாக நாம் கருத முடியாது.
தற்போது விடுதலைப் புலிகள் வெளிநாடுகளில் செயற்படுகின்றனர். பத்மநாதன், காட்டில் வாழும் திருடனைப் போல எங்கோ இருந்து கொண்டு செயற்படுகின்றார். சூசை ஒரு சமயத்தில் குறிப்பிட்டார் உண்மையான யுத்தம் தரையில் அல்ல கடலிலேயே இருப்பதாக. எனினும், அவை அனைத்தும் தற்போது வெற்றி கொள்ளப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக வெள்ளையர்களும் செயற்பட்டார்கள். உலகில் எந்தவொரு அமைப்பிற்கும் இல்லாத பலத்தை விடுதலைப் புலிகள் கொண்டிருந்தார்கள். அவர்கள் விமானம் வைத்திருந்தார்கள். எனினும், அந்த பலத்தை இலங்கை படைவீராகள் முறியடித்து விட்டனர்.
விடுதலைப் புலிகள் மீண்டும் எழுவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளது.
போர் முடிவடைந்தாலும் அதன் மாயை இன்னமும் முடியவில்லை. கரையோரப் பாதுகாப்பு அண்மையில் பலப்படுத்தப்பட்டது.
எப்படி இருப்பினும் மீண்டும் புலிகள் ஆயுதங்களை ஏந்தும் அளவுக்கு நாங்கள் இருந்து விட மாட்டோம் என்றார் ரம்புகவெல்ல.
கொரில்லாத் தாக்குதலுக்கு ஆயத்தம்...
இதற்கிடையே, கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகள் கொரில்லாத் தாக்குதலில் ஈடுபடத் தயாராகி வருவதாக இலங்கை உளவுப் பிரிவு அரசை எச்சரித்துள்ளதாம்.
வன்னிப் பகுதியில் நடந்த இறுதிப் போரின்போது கிட்டத்தட்ட 2000க்கும் மேற்பட்ட போராளிகள் தப்பி காடுகளுக்குள் போய் விட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் கிழக்கில் உள்ள அடர்ந்த வனப் பகுதிகளுக்குள் ஊடுறுவியிருப்பதாக கூறப்படுகிறது.
அவர்களை ஒருங்கிணைக்கவும், வழி நடத்தவும் உரிய நபர்கள் இல்லாததால் என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் வனங்களுக்குள்ளேயே முடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் அவர்கள் கொரில்லாத் தாக்குதல்களில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக இலங்கை அரசை, அந்நாட்டு உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது.