'அரசியல்வாதி நாட்டை விற்கிறான்-மக்கள் ஓட்டை விற்கின்றனர்'
மதுரை: அரசியல்வாதி நாட்டை விற்கிறான். பொது மக்கள் ஓட்டை விற்கின்றனர். இதுக்கு விளக்கம் சொல்ல ஒரு பொதுக் கூட்டம் என்று லட்சிய தி.மு.க. பொது செயலாளர் விஜய டி.ராஜேந்தர் கடுப்புடன் கூறியுள்ளார்.
மதுரை, திருமங்கலத்தில் லட்சிய தி.மு.க. சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் லட்சிய தி.மு.க -வின் பொது செயலாளர் விஜய டி.ராஜேந்தர் படு காட்டமாக பேசினார். ஓட்டுக்காக மக்கள் விலை போகிறார்கள் என்று பகிரங்கமாக அவர் குற்றம் சாட்டினார்.
வாக்காளர்களை பகிரங்கமாக குற்றம் சாட்டிப் பேசிய முதல் அரசியல்வாதி ராஜேந்தராகத்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ராஜேந்தர் பேசுகையில், திருமங்கலம் இடைத் தேர்தலில் பணநாயகம் ஜெயிக்கும். ஜனநாயகம் ஜெயிக்காது
என்று நான் அன்றே சொன்னேன். அது தான் நடந்தது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சிகளின் பணநாயகத்தை மீறி எந்த கட்சிக்கு ஓட்டு போட்ட உண்மையான ஜனநாயக வாதியை மதிக்கிறேன்.
வணங்குகிறேன்.
பொது மக்கள் பலர் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டார்கள். இதனால் தான் குடி தண்ணீர் கூட காசு கொடுத்து வாங்கும் அவல நிலை உருவாகியுள்ளது.
பருப்பு விலை உயர்ந்து விட்டது. விலைவாசி உயர்ந்து விட்டது . பெட்ரோல்- டீசல் விலை ஏறி போச்சு. கச்சா எண்ணை விலை குறைந்தால் டீசல்-பெட்ரோல்
விலையை ஏன் குறைப்பது இல்லை. யாராவது கேட்கிறீர்களா? இல்லை. ஏன் ?.
அரசியல்வாதி நாட்டை விற்கிறான். பொது மக்கள் ஓட்டை விற்கின்றனர். இதுக்கு விளக்கம் சொல்ல ஒரு பொதுக்கூட்டம். தமிழன் எப்படி திருந்துவான். தமிழன் தமிழனாக இருக்க வேண்டும். அப்போது தான் முன்றே முடியும்.
தமிழ்நாட்டில் காமராஜர், அண்ணா, முத்துராமலிங்க தேவர், கக்கன் போன்றவர்கள் வாழ்ந்த அரசியல் மறைந்து விட்டது என்றார் படு காட்டமாக.