'தூங்குகிறவனை எழுப்பலாம்; பாசாங்கு செய்பவனை'!
சென்னை: கோயம்பேட்டில் ரூ. 120 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விட்டதாக பாமகவினர் பொய்யான குற்றச்சாட்டைக் கூறிக் கொண்டிருப்பதாக அமைச்சர் பரிதிஇளம் வழுதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தூங்குகிறவனை எழுப்பலாம்- ஆனால் தூங்குவதைப் போல பாசாங்கு செய்கிறவனை எழுப்ப முடியாது என்பது பழமொழி. அதைப் போலத்தான் ஒருசில பேர் திட்டமிட்டுக் கொண்டு குறிப்பாக பாமகவினர்திமுக அரசு மீது சாட்டுவதற்கு எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் கிடைக்காத நிலையில் கோயம்பேட்டில் ரூ. 120 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விட்டதாக தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு மதிப்பளித்து ஒரு சில ஏடுகளும் அதனைப் பெரிதுபடுத்தி கொட்டை எழுத்துக்களில் ரூ. 120 கோடி நில ஆக்கிர மிப்பு என்றெல்லாம் செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சட்டமன்றப் பேரவையில் இதற்காகவே ஒரு சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதற்கு நான் நீண்ட விளக்கமும் அளித்திருக்கிறேன்.
ஓசோன் ப்ராஜக்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட் என்பது தனியார் நிறுவனம். அந்த நிறுவனம் கோயம்பேட்டில் 42.31 ஏக்கர் நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்தது. அந்த 42.31 ஏக்கர் நிலத்தில் 1.77 ஏக்கர் மட்டுமே, திருமங்கலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமானது. மீதமுள்ள 40.54 ஏக்கர் நிலம் அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான பட்டா நிலம்.
கோவிலுக்குச் சொந்தமான 1.77 ஏக்கர் நிலத்தைக்கூட, அரசோ, கோவில் நிர்வாகமோ அந்தக் கம்பெனிக்குக் கொடுத்து விடவில்லை.
அந்த நிலம் குறித்து உச்சநீதிமன்றத்திலே வழக்கு நிலுவையிலே உள்ளது. ஆனாலும் பாமகவும், வேறு சில நபர்களும் ஏதோ ரூ. 120 கோடி பெறுமானமுள்ள இடத்தை அந்த ஓசோன் நிறுவனத்திற்கு அரசு தாரை வார்த்து விட்டதைப்போல தொடர்ந்து செய்தியை அதிர்ச்சியூட்டத்தக்க வகையில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் தரப்பட்ட இடைக்கால ஆணையின்படி கோவிலுக்குச் சொந்தமான 1.77 ஏக்கர் நிலத்தில் எந்தவிதமான கட்டுமானப் பணியும் மேற்கொள்ளக் கூடாது என்ற நிபந்தனையுடன் ஓசோன் நிறுவனத்தின் கட்டிடம் கட்டுவதற்கான மனுவினை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் ஏற்று, அனுமதி வழங்கியுள்ளது. தமிழக அரசோ, மாநகராட்சி மன்றமோ இதிலே எந்த வகையிலும் தலையிடவில்லை.
பிரச்சினைக்குரிய கோவில் நிலமாக கூறப்படும் 1.77 ஏக்கர் நிலத்தில், ஓசோன் நிறுவனம் எந்தவிதமான கட்டுமானப் பணியினையும் மேற்கொள்ளவில்லை. கோவில் நிலமான அந்த 1.77 ஏக்கர் நிலத்தையும் கோவிலுக்கே உரிமையுடையதாக ஆக்க, உச்சநீதிமன்றத்திலே வழக்கு நிலுவையிலே உள்ளது.
உண்மை நிலை இவ்வாறிருக்க பாமகவினரும், சில தனிப்பட்ட நபர்களும், வேண்டுமென்றே இந்தச் செய்தியினைத் திரித்து பூதாகரமாக பிரசாரம் செய்து வருவதும், அதற்கு முக்கியத்துவம் கொடுத்து சில நாளேடுகள் பெரிய தலைப்பிட்டு வெளியிடுவதும் உள் நோக்கத்தோடு களங்கம் சுமத்த வேண்டுமென்ப தற்காகத்தானே தவிர வேறல்ல என்று கூறியுள்ளார் பரிதி.












Click it and Unblock the Notifications