பெங்களூர் திருவள்ளுவர் சிலை திறக்க தேர்தல் கமிஷன் அனுமதி
பெங்களூர்: பெங்களூரில் வரும் ஆகஸ்ட் 9ம் தேதி திட்டமிட்டபடி திருவள்ளுவர் சிலையைத் திறக்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அதே நேரத்தில் திறப்பு விழாவில் அரசியல் பேசக்கூடாது என்று தடை விதித்துள்ளது.
பெங்களூர் அல்சூர் ஏரிக் கரை அருகே அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை முதல்வர் கருணாநிதி வரும் ஆகஸ்ட் 9ம் தேதி திறந்து வைக்க திட்டமிட்டிருந்தார். அதே போல ஆகஸ்ட் 13ம் தேதி சென்னையில் கன்னடக் கவிஞர் சர்வஞர் சிலையை கர்நாடக முதல்வர் எதியூரப்பா திறக்க இருந்தார்.
இந் நிலையில் தமிழகத்தில் 5 சட்டசபைத் தொகுதிகளுக்கு ஆகஸ்ட் 18ம் தேதி இடைத் தேர்தல் நடக்கும் நிலையில் அதே நாளில் கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் கோவிந்தராஜ் நகர், சென்னபட்டனா உள்பட 5 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடக்கிறது.
இதனால் திருவள்ளுவர், சர்வஞர் சிலைகளைத் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இரு மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் சிலைகளைத் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.
ஆனாலும் சிலை திறப்புத் தேதிகள் முன்பே முடிவு செய்யப்பட்டுவிட்டதாலும், இடைத் தேர்தல் நடக்கும் தொகுதிக்குள் சிலை இல்லை என்பதாலும், அதைத் திறக்க அனுமதிளிக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் எதியூரப்பா அனுமதி கோரி கடிதம் எழுதியிருந்தார்.
இந் நிலையில் சிலையைத் திறக்க மத்திய தேர்தல் ஆணையம் அனுமதியளித்துள்ளது. அதே நேரத்தில் சிலை திறப்பு விழாவில் அரசியல் பேசக்கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளது.
ஆனால் இந்த சிலை திறப்பை சில கன்னட அமைப்புகள் எதிர்த்துள்ளதும், சிலை திறக்கும் நாளில் மாநில அளவில் பந்த் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் தமிழ் சங்கம் சார்பில் அல்சூர் ஏரிக்கரையில் 1991ம் ஆண்டு திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. அப்போது சிலை திறக்க கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் தடை வாங்கின. இதனால் கடந்த 18 ஆண்டுகளாக சிலை திறக்கப்படவில்லை. சிலை திறப்பைத் தடுத்ததில் அப்போதைய முதல்வர் பங்காரப்பாவும் முக்கிய பங்குண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னைக்கு அனுப்பப்பட்ட சர்வஞர் சிலை..
இதற்கிடையே சென்னையில் நிறுவனப்படவுள்ள கன்னடக் கவிஞர் சர்வஞரின் சிலை நேற்று பெங்களூரிலிருந்து அங்கு அனுப்பப்பட்டது.












Click it and Unblock the Notifications