இடைத் தேர்தல் வெற்றிக் கனியை கருணாநிதியிடம் சமர்ப்பிப்போம் - தென் மண்டல திமுக
மதுரை: தென் மண்டலத்திற்குட்பட்ட கம்பம், இளையாங்குடி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய தொகுதிகளில் நடைபெறும் இடைத் தேர்தலில் வெற்றிக் கனியைப் பறித்து அதை முதல்வர் கருணாநிதியிடம் சமர்ப்பிப்போம் என்று தென் மண்டல திமுக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தென் மண்டல திமுக அமைப்புச் செயலாளரும், மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி தலைமையில், அவரது ஏற்பாட்டில், மதுரை தயா மஹாலில் இக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி (திண்டுக்கல்), சுப.தங்கவேலன் (ராமநாதபுரம்), சாத்தூர் ராமச்சந்திரன் (விருதுநகர்), தங்கம் தென்னரசு, சுரேஷ்ராஜன் (நாகர்கோவில்), டி.பி.எம்.மைதீன்கான், கே.ஆர்.பெரியகருப்பன் (சிவகங்கை), கீதாஜீவன், டாக்டர் பூங்கோதை, தமிழரசி மற்றும் மாவட்ட செயலாளர்கள் கோ.தளபதி (மதுரை மாநகர்), பி.மூர்த்தி எம்.எல்.ஏ. (மதுரை புறநகர்), மூக்கையா (தேனி), கருப்பசாமி பாண்டியன் (நெல்லை), பெரியசாமி (தூத்துக்குடி), மாநில செயற்குழு உறுப்பினர் பெ.குழந்தைவேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் இடைத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு அயராது பாடுபட்ட மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணி தோழர்கள் ஆகியோருக்கு இந்த கூட்டம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
- தென்மாவட்டங்களில் 9 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றுத் தந்த தென்மண்டல அமைப்பு செயலாளர் மு.க.அழகிரிக்கும், அவருக்கு மத்திய அரசில் உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சர் பொறுப்பை பெற்றுத் தந்த முதல்வர் கருணாநிதிக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.
- பின்தங்கிய மாவட்டமான ராமநாதபுரத்தில் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலை, தொண்டி துறைமுக திட்டம், தெர்மல் பவர் ஸ்டேஷன், பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலை, மேலூரில் கிரானைட் பாலீஸ் தொழிற்சாலை, இடையப்பட்டியில் மருந்தியல் தொடர்பான உயர்கல்வி நிறுவனம், சிப்பெட் நிறுவனம் மூலம் பிளாஸ்டிக் கருவிகள் தொழில் நுட்ப கல்வி நிறுவனம் ஆகியவை அமைக்க ஏற்பாடு செய்து வருவதற்காகவும், டெல்லியில் தவித்த தமிழர்களை சென்னைக்கு அனுப்பி வைத்ததற்கும், பஞ்சாபில் இறந்த வாலிபரின் உடலை மதுரைக்கு கொண்டு வர உதவியதற்கும் அமைச்சர் மு.க.அழகிரிக்கு இந்த கூட்டம் நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறது.
- இளையாங்குடி, கம்பம், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெற செய்து, தி.மு.க. தலைவர் கலைஞரின் பாதங்களில் வெற்றிக்கனியை சமர்ப்பிப்பது என முடிவு செய்யப்படுகிறது என தீர்மானிக்கப்பட்டது.
திமுக பணிக்குழுக்கள் அமைப்பு..
இதற்கிடையே, ஐந்து தொகுதிகளுக்கும் திமுக தலைமைக் கழகம் தேர்தல் பணிக்குழுக்களை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நடைபெற உள்ள கம்பம், இளையான்குடி, ஸ்ரீவைகுண்டம், தொண்டாமுத்தூர், பர்கூர் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் கழக வேட்பாளர்களும், கழக கூட்டணி வேட்பாளரும் வெற்றி பெறுவதற்கு ஆக்கபூர்வமான தேர்தல் பணியாற்றுவது சம்பந்தமாக கீழ்க்கண்ட மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட கழக செயலாளர்கள், அமைச்சர்கள், கழகத்தின் பல்வேறு பொறுப்புகளிலுள்ள நிர்வாகிகள், தொண்டர்கள் அவரவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகளில் பணியாற்றிட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கம்பம்: தேனி, திண்டுக்கல், மதுரை மாநகர், மதுரை புறநகர், திருச்சி, கரூர், கடலூர்.
இளையான்குடி: சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை.
ஸ்ரீவைகுண்டம்: தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி.
தொண்டாமுத்தூர்: பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி.
பர்கூர்: வடசென்னை, தென்சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தர்மபுரி வடக்கு, தர்மபுரி தெற்கு, கிருஷ்ணகிரி.