அதிகாரிகள் பற்றாக்குறையில் ராணுவம் - 11,387 பேர் தேவை
டெல்லி: ராணுவத்திற்கு 11,387 அதிகாரிகள் பற்றாக்குறையாக இருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி நேற்று லோக்சபாவில் தெரிவித்தார்.
இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், கடற்படைக்கு 1512 அதிகாரிகளும், விமானப்படையில் 1400 அதிகாரிகளும் பற்றாக்குறையாக உள்ளது.
இருப்பினும் முப்படைகளிலும் அதிகாரிகளுக்குக் கீழ் உள்ள வீரர்களின் எண்ணிக்கையில் பற்றாக்குறை எதுவும் இல்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் ராணுவத்தில் வீரர்களாக சேர்ந்துள்ளனர்.
கடந்த மூன்று ஆண்டுகளில் ராணுவத்தில் 5033 அதிகாரிகள், 96 ஆயிரத்து 453 வீரர்கள் சேர்ந்துள்ளனர். கடற்படையில் 1209 அதிகாரிகள், 6792 வீரர்கள் இணைந்துள்ளனர். விமானப்படையில், 1451 அதிகாரிகள், 21,311 வீரர்கள் சேர்ந்துள்ளனர்.
கடந்த மூன்று ஆண்டுகளில் ராணுவத்தில், 3764 அதிகாரிகள், 27,477 வீரர்கள் விருப்ப ஓய்வு அல்லது விடுபடக் கோரி விண்ணப்பித்தனர்.
கடற்படையில் 842 அதிகாரிகளும், 126 வீரர்களும் ஓய்வு கோரினர். விமானப்படையில் 893 அதிகாரிகளும், 3961 வீரர்களும் ஓய்வு கோரினர்.
ஏவி சிங் கமிட்டி பரிந்துரையின் பேரில், 750 லெப்டினென்ட் கர்னல் பதவி கர்னல் பதவியாக உயர்த்தப்பட்டுள்ளது. கர்னல், பிரிகேடியர், மேஜர் ஜெனரல், லெப்டினென்ட் ஜெனரல் மற்றும் இரு பதவிகளில் கூடுதலாக 1896 இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றார் அந்தோணி.