கேஜி கேஸ் விவகாரம் - பெட்ரோலிய அமைச்சர் மீது அனில் பாய்ச்சல்
டெல்லி: கேஜி கேஸ் (கிருஷ்ணா கோதாவரி படுகை கேஸ்) விவகாரத்தில் முகேஷ் அம்பானிக்கு சாதகமாக பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோராவும், பெட்ரோலிய அமைச்சகமும் நடந்து கொள்கின்றன என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார் ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்சஸ் லிமிட்டெட் (ஆர்.என்.ஆர்.எல்.) நிறுவனத்தின் தலைவரான அனில் அம்பானி.
ஆர்.என்.ஆர்.எல். நிறுவனத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் பேசியபோது அனில் அம்பானி இந்த பகிரங்க குற்றச்சாட்டை வைத்தார்.
மத்திய அரசின் பெட்ரோலியத்துறைக்காக கேஜி படுகைப் பகுதியிலிருந்து கேஸ் எடுக்கும் பணியில் அனில் மற்றும் முகேஷுக்குச் சொந்தமான நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதில் விலை நிர்ணயம் செய்வது, லாபப் பங்கீடு உள்ளிட்டவை குறித்து இரு நிறுவனங்களுக்கும் இடையே பிரச்சினை வெடித்துள்ளது.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார் முகேஷ் அம்பானி. இதுகுறித்து மத்திய பெட்ரோலியத்துறை கருத்து தெரிவிக்கையில், இரு நிறுவனங்களுமே மத்திய அரசுக்காகத்தான் கேஸ் எடுக்கின்றன. ஏதோ அவற்றின் சொந்த இடத்தில் எடுப்பதைப் போல சண்டை போட்டுக் கொள்வதா என்று கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் செப்டம்பர் 1ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இந்த நிலையில் மும்பையில் நடந்த நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் பேசிய அனில் அம்பானி, கேஸ் எடுப்பது தொடர்பான ஒப்பந்தத்தை மீறும் வகையில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் (முகேஷ் அம்பானியுடையது) நடந்து வருகிறது. மேலும், அதிக லாபத்தை தானே எடுத்துக் கொள்ளும் வகையில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் செயல்பட்டு வருகிறது.
பெட்ரோலியத் துறை அமைச்சரும், அமைச்சகமும், இந்த விஷத்தில் முகேஷ் அம்பானிக்கு சாதகமாக, பாரபட்சமாக நடந்து கொள்கின்றனர்.
ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும், ஆர்.என்.ஆர்.எல் நிறுவனத்திற்கும் இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்த விவரங்கள் தெரியாமல் பெட்ரோலியத்துறை அமைச்சகம் கருத்து தெரிவித்து வருகிறது என்றார் அனில்.
அனில் அம்பானியின் இந்தப் புகார் குறித்து முகேஷ் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. இருப்பினும் அவரது வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக நிறையப் பேசியாகி விட்டது. தற்போது வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. எனவே வெளியில் இதுகுறித்துப் பேசுவது சரியல்ல என்றார்.












Click it and Unblock the Notifications