திருவள்ளுவர் சிலை திறப்பு-ஆகஸ்ட் 9ல் 'பெங்களூர் பந்த்'!

காவிரிப் பிரச்சனை, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீ்ர் திட்டம் ஆகியவற்றை காரணம் காட்டி இந்த சிலை திறப்பை கன்னட அமைப்புகள் எதிர்க்கி்ன்றன.
இந்த எதிர்ப்புகளையும் மீறி சிலை திட்டமிட்டபடி திறக்கப்படும் என கர்நாடக முதல்வர் எதியூரப்பா அறிவித்துள்ள நிலையில் பந்துக்கு அழைப்பு விடுத்து அந்த தினத்தில் பெங்களூரையே ஸ்தம்பிக்க வைக்க கன்னட அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.
வாட்டாள் நாகராஜின் கன்னட சாளுவளி வட்டாள் பக்ஷா, பிரவீன் ஷெட்டி தலைமையிலான கன்னட ரக்ஷன வேதிகே, கன்னட சேனை, கன்னட வேதிகே ஆகிய அமைப்புகள் கூடி இந்த பந்த் அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
இதே தினத்தில் பந்த் நடத்த நாராயண கெளடா தலைமையிலான இன்னொரு கன்னட ரக்ஷன வேதிகே என்ற அமைப்பும் பந்துக்கு ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் சிலை திறப்பையொட்டி சட்டம்-ஒழுங்கு பிரச்சனை வெடிக்கலாம் என்ற அச்சம் தமிழர்களிடையே பரவ ஆரம்பித்துள்ளது.
பெங்களூர் தவிர அதையொட்டிய சாம்ராஜ் நகர் மாவட்டத்திலும் பந்த்துக்கு இந்த அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
இது குறித்து வாட்டாள் நாகராஜ் கூறுகையில், பிரச்சனையின் தீவிரம் தெரியாமல் முதல்வர் எதியூரப்பா சிலையைத் திறக்கப் போவதாக அறிவித்துள்ளார். சென்னையில் சர்வஞருக்கு சிலை வைக்க வேண்டிய அவசியம் இல்லை. காவிரி விவகாரம் வெடிக்கும்போது சர்வஞரின் சிலையை கல்லை எறிந்தே தமிழர்கள் உடைத்துவிடுவார்கள்.
நமது கவிஞரை தமிழர்கள் அவமரியாதை செய்ய நாம் ஏன் அனுமதிக்க வேண்டும். அவரது சிலையை முதலில் விதான செளதாவி்ல் கர்நாடக அரசு வைக்க வேண்டும் என்றார்.
கன்னட வேதிகே தலைவர் பிரபாகர் கூறுகையில், ராஜ்குமாரை வீரப்பன் கடத்திச் சென்றபோது அவரை விடுவிக்க அவன் வைத்த முக்கிய கோரிக்கைகளில் ஒன்று திருவள்ளுவர் சிலையைத் திறப்பதாகும் என்றார்.












Click it and Unblock the Notifications