மதுரையில் ரூ.48,000 கோடியில் 'ஏரோ-பார்க்', பி.பி.ஓ
மதுரை: மதுரையில் ரூ.48,000 கோடியில் விமானக் கருவிகள் தயாரிப்பு, விமானங்கள் பழுதுபார்க்கும் 'ஏரோ-பார்க்' நிறுவப்படவுள்ளதாக மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க. அழகிரி கூறினார்.
பொதுமக்கள் குறை கேட்க வசதியாக எம்பி அலுவலக கட்டடத்தை திறந்து வைத்த அழகிரி கூறுகையில்,
மதுரையில் 10 பில்லியன் டாலர் மதிப்பில் அதாவது சுமார் ரூ.48,000 கோடியில் 'ஏரோ-பார்க்' என்ற விமானக் கருவிகள் தயாரிப்பு மற்றும் பழுது நீக்கும் தொழிற்சாலைகள் அடங்கிய மாபெரும் பூங்காவை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த பார்க்கில் ஏரோஸ்பேஸ் யுனிவர்சிட்டி, விமானத்துறைக் கல்லூரி, அனைத்து வசதிகளும் கொண்ட ஏரோ மெடிசின் மருத்துவமனை, ஆராய்ச்சி மையம் ஆகியவை இடம் பெறும்.
இந்தத் தொழிற்சாலைகள் அமைந்தால் இந்தப் பகுதியைச் சேர்ந்த சுமார் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இதற்கான இடம் தேர்வு செய்வது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள சென்னை சிஐஐ சார்பில் சிறப்புக் குழு, இன்று (செவ்வாய்க்கிழமை) மதுரை வருகிறது.
சென்னையில் அமையவுள்ள சிப்பெட் நிறுவனத்தின் கிளையை மதுரையிலும் நிறுவ நடவடிக்கை எடுத்துள்ளேன்.
மதுரையில் ஒரு மாபெரும் பி.பி.ஓ. நிறுவனத்தின் கிளையும் அமையவுள்ளது. இதற்கான ஒப்பந்தமும் விரைவில் கையெழுத்தாகவுள்ளது. இதனால் சுமார் 2,000 பேருக்கு வேலை கிடைக்கும்.
என்னுடைய துறை மூலமாக தொழிற்சாலைகளை மதுரை உள்ளிட்ட தென் மாவட்டப் பகுதிகளில் ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்றார் அழகிரி.












Click it and Unblock the Notifications