காதலியின் விமான பயணம்-தடுத்த வாலிபருக்கு அடி
சென்னை: சென்னை விமான நிலையத்தில் காதலியின் பயணத்தை தடுக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் தாக்கினர்.
இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த அமலராணி தனது மகன் சுதாகர் (23), மகள் விஜிதா (19) ஆகியோருடன் சுவிஸ் நாட்டு குடியுரிமை பெற்று அந் நாட்டில் வசிக்கிறார்.
இன்று காலை சுவிஸ் செல்ல இவர்கள் சென்னை விமான நிலையம் வந்தனர். அப்போது ஒரு வாலிபர் வந்து அமலராணியின் பையை பறித்துக் கொண்டு ஓடினார். அந்தப் பையில் பாஸ்போர்ட், விசா, பணம் ஆகியவை இருந்தன.
இதைப் பார்த்த பயணிகள் வாலிபரை விரட்டிப் பிடித்து தாக்கினர்.
அப்போது விஜிதா, அவரை அடிக்காதீர்கள், அவர் என் காதலன். என் விமான பயணத்தை தடுக்கவே அவர் இதுபோல் நடந்து கொண்டார் என்றார். இதையடுத்து அந்த வாலிபருக்கு அடி விழுவது நின்றது.
ஆனாலும் போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியபோது அவரது பெயர் பிரேம்குமார் (24) என்று தெரியவந்தது.
இந்த விஷயத்தில் அமலராணி புகார் கொடுக்க விரும்பாததால் போலீசார் வாலிபரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.