சர்ச்சைக்குரிய எய்ட்ஸ் விளம்பரம்-பெண், குழந்தையின் படத்தை நீக்க கோர்ட் உத்தரவு
சென்னை: தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகத்தின் போஸ்டர்களில் இடம் பெற்றுள்ள பெண் மற்றும் அவரது குழந்தையின் படத்தை ஒரு வாரத்திற்குள் அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரப் படத்தில் தான் மற்றும் தனது குழந்தையின் புகைப்படம் தங்களது அனுமதி இல்லாமலேயே இடம் பெற்றிருப்பதாக சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த திலகவதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகத்தின் இந்தசெயலால் எனது வாழ்க்கையே பாதிக்கப்பட்டுள்ளது. எனக்கும், எனது குழந்தைக்கும் எய்ட்ஸ் இருப்பதாக கருதி சமுதாயம் என்னைப் பார்க்கும் பார்வையால் நான் கூனிக் குறுகிப் போயுள்ளேன். தற்கொலை செய்து கொள்ளலாமா என்று கூட நினைத்தேன்.
இந்த அவமானத்திற்கு இழப்பீடாக தமிழ்நாடு எய்ட்ஸ் கழகம் எனக்கு ரூ. 1 கோடி தர உத்தரவிட வேண்டும். இந்த விளம்பரங்களை நீக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு பரிசீலித்த நீதிபதி சுகுணா இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், இந்த விளம்பரத்தை சசி அட்வர்டைசிங் நிறுவனம்தான் மேற்கொண்டது. இன்டர்நெட்டிலிருந்து இந்தப் பெண் மற்றும் குழந்தையின் படத்தை எடுத்துப் பயன்படுத்தியுள்ளனர். அந்தப் படம் இன்னும் கூட அந்த இணையதளத்தில் உள்ளது.
இந்த விளம்பரத்திற்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைப் பார்த்த நீதிபதி, இது மிகவும் சீரியஸான விஷயம். எந்தவித நோய் பாதிப்பும் இல்லாத பெண் மற்றும் அவரது குழந்தையின் படத்தை அவர்களது அனுமதி இல்லாமல் எப்படிப் பயன்படுத்தலாம்.
இதனால் ஒரு குடும்பத்தின் சமுதாய அந்தஸ்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே ஒரு வாரத்திற்குள் இந்த விளம்பர பேனர்களை எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகம் அகற்ற வேண்டும். இந்த வழக்கில் சசி அட்வர்டைசிங் நிறுவனத்தையும் சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.