அழகிரியின் தங்கச் சங்கிலி பரிசு அறிவிப்பு - புகார் வந்தால் நடவடிக்கை எடுப்போம்: நரேஷ் குப்தா
தேர்தல் நடைமுறைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தலைமை தாங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
இடைத்தேர்தல் நடைபெறும் இடங்களில் தேர்தல் நடைமுறைகள், அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
தேர்தலின் போது வாக்குப்பதிவு குறித்த தகவல்களை 3 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்திற்கும், 3 மணிக்கு மேல் அரை மணி நேரத்திற்கு ஒரு முறையும் தேர்தல் ஆணையத்திற்கு, தேர்தல் அதிகாரிகள் எஸ்.எம்.எஸ். மூலம் கொடுப்பார்கள்.
ஒவ்வொரு தேர்தலின் போதும், வாக்களிக்க விருப்பமில்லை என்று கூறும் படிவம் 49 ஓ கிடைப்பதில்லை என்று கூறுவது தவறான கருத்தாகும். அந்த படிவம் இல்லை என்றால் படிவம் 17-ல் பதிவு செய்யும் வசதி உள்ளது.
இடைத்தேர்தல் நடைபெறும் 5 தொகுதிகளில் பணம் கொடுப்பது குறித்து எந்த புகாரும் இது வரை தேர்தல் ஆணையத்திற்கு வரவில்லை. ஆனால் கட்சிக்காரர்களுக்கு பணம் கொடுத்ததாக கேள்விப் பட்டேன்.
அதிக வாக்குகளை பெற்றுத் தரும் மாவட்ட செயலாளர்களுக்கு தங்கச் சங்கிலி வழங்கப்படும் என்பது குறித்த தகவல்களை செய்தித்தாளில் பார்த்தேன்.
இது தொடர்பாக யாரேனும் புகார் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் செய்யமுடியாது என்று பலமுறை விளக்கம் கொடுத்து உள்ளோம். டெல்லியில் இது குறித்து செய்முறை விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்தலை புறக்கணிப்போம் என்று சட்டப்படி சொல்லக் கூடாது. ஆனால் ஒருவர் அவர்களது ஆதரவாளர்களை ஓட்டுபோடக்கூடாது என்று கூறலாம். எனவே அது வேறு, இது வேறு.
நாம் ஓட்டு போடும் போது எந்த கட்சிக்கு ஓட்டு போடுகிறோம் என்று தெரியவேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் கூறியுள்ளார். ஆனால் அது குறித்த தொழில்நுட்பம் இல்லை என்றார் நரேஷ் குப்தா.