'என் தம்பி எதியூரப்பா': கருணாநிதி நெகிழ்ச்சி - எதியூரப்பா கண்ணீர்!
பெங்களூர்: எனக்கு வயது 86, எதியூரப்பாவுக்கு 67. நான் அவரை தம்பி என்றும் அழைக்கலாம் என்று முதல்வர் கருணாநிதி கூறியதைக் கேட்டு, கர்நாடக முதல்வர் எதியூரப்பா கண் கலங்கினார்.
பெங்களூர் திருவள்ளுவர் சிலை திறப்பு தமிழக, கர்நாடக மாநில உறவுகளில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக வாழ் தமிழர்கள் பெரும் எழுச்சியுடன் கலந்து கொண்டனர்.
அனைவரும் மிகுந்த நெகிழ்ச்சியுடனும், உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும் காணப்பட்டனர். இது விழா மேடைக்கும் பரவியது.
முதல்வர் கருணாநிதி சிறப்புரை நிகழ்த்துகையில், எதியூரப்பாவை தனது தம்பி என்று கூறி அனைவரையும் நெகிழ வைத்தார்.
கருணாநிதி பேசுகையில், எனக்கு வயது 86. இவருக்கு (எதியூரப்பா) 67. நான் இவரைத் தம்பி என்றும் அழைக்கலாம்.
எனவே, மூத்த சகோதரரும், இந்த இளைய சகோதரரும் சேர்ந்து திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்து புதிய முன்னோடியை ஏற்படுத்தியுள்ளோம். வரலாறு படைத்துள்ளோம்.
இதில் எந்த அரசியலும் இல்லை. அற இயல்தான் உள்ளது. இதை அனைத்து மாநிலங்களும் புரிந்து கொள்ள முன்வர வேண்டும் என்றார் கருணாநிதி.
கருணாநிதியின் பேச்சை வாய் விட்டு சிரித்து மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருந்த எதியூரப்பா, தன்னைத் தம்பி என்று கருணாநிதி அழைத்ததைக் கேட்டதும் கண் கலங்கினார்.












Click it and Unblock the Notifications