ஆதரவாளர்களுடன் இன்று திமுகவில் இணைகிறார் அனிதா ராதாகிருஷ்ணன்
சென்னை: அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் இன்று தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைகிறார்.
தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும், திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருந்தவர் அனிதா.ஜெயலலிதா அமைச்சரவையில் வீட்டு வசதித்துறை அமைச்சராகவும் இருந்தார்.
கடந்த மாதம் 29-ந் தேதி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அனிதா ராதாகிருஷ்ணன் நீக்கப்பட்டார்.
இதையடுத்து முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்துப் பேசினார். அப்போது திமுகவில் தான் இணையவிருப்பதாக பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதை சபாநாயகர் ஆவுடையப்பன் ஏற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் இன்று முதல்வர் கருணாநிதி முன்னிலையில் மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் வைத்து ஆயிரக்கணக்கானோருடன் திமுகவில் இணைகிறார் அனிதா.
அவருடன் 20 ஆயிரம் தொண்டர்கள் வரவுள்ளனராம். பிரமாண்டமான முறையில் இணைப்பு விழா நடைபெறுகிறது.
இதுகுறித்து அனிதா கூறுகையில், முதல்வர் கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.வில் இணைவதற்காக திருச்செந்தூர் தொகுதியில் இருந்து 114 பஸ்கள், 70 வேன்கள், 300 கார்கள், முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 3 சிறப்பு பெட்டிகள் என சுமார் 20 ஆயிரம் தொண்டர்களுடன் சென்னை வருகிறேன் என்றார்.
அனிதாவின் வருகையையொட்டி அண்ணா அறிவாலயம் களை கட்டியுள்ளது.