உயர்நீதிமன்றம்-மனைவியை வெட்ட பாய்ந்த கணவர்!
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் விவாகரத்து கேட்டு மனு செய்த மனைவியை அவரது கணவர் அரிவாளால் வெட்டப் பாய்ந்தார். இதையடுத்து அவரது மாமியார் குறுக்கே புகுந்து மருமகனை தடுத்து நிறுத்தி மகளைக் காப்பாற்றினார்.
மருமகன் கையில் இருந்த அரிவாளை தடுத்து நிறுத்தியதில் அவரது கையில் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கிரனேத் (41) என்பவரின் மகள் ரெஜீனா (20). இவரது கணவர் வடிவேல் (23). வடிவேலுடன் வாழப் பிடிக்காத ரெஜீனா, விவாகரத்து கோரி குடும்ப கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
நேற்று பிற்பகல் 12 மணியளவில் வழக்கு விசாரணைக்காக தனது தாயாருடன் ரெஜீனா கோர்ட்டுக்கு வந்தார். விசாரணையில் ஆஜரான அவர் பின்னர் வெளியே வந்தார்.
கோர்ட்டை விட்டு வெளியேறுவதற்காக தாயாரும், மகளும் வந்தபோது, உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள தீயணைப்பு நிலையத்தி்ற்குப் பின்புறம், மரத்துக்குப் பின்னால் மறைந்திருந்த வடிவேல் வேகமாக அங்கு வந்தார். கையில் அரிவாளுடன் வந்த அவர் கையில் வைத்திருந்த அரிவாளால் ரெஜீனாவை வெட்ட முயன்றார்.
இதைப் பார்த்து அலறிய கிரனேத், வடிவேலுக்குக் குறுக்கே பாய்ந்து அவரது கையில் இருந்த அரிவாளைப் பிடித்துக் கொண்டார். அவரைத் தள்ளி விட்டு விட்டு வெட்ட முயன்ற வடிவேலின் முயற்சி தோற்றது. அதற்குள் அங்கு
கூட்டம் கூடி விட்டது.
இதைப் பார்த்த வடிவேல் அரிவாளை கீழே போட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். அரிவாளை அழுத்தமாக பிடித்ததாலும், அது கையை அழுத்தியதாலும் கிரனேத்தின் கையில் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து உயர்நீதிமன்ற போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தப்பி ஓடி விட்ட வடிவேலுவைத் தேடி வருவதாக இன்ஸ்பெக்டர் மன்சூர் அலி தெரிவித்தார்.
வடிவேல் - ரெஜீனா விவகாரம் குறித்து போலீஸார் கூறுகையில், இருவரும் ஆறு மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். சொந்த வீட்டில் வசித்து வந்தனர். வடிவேலுடைய குடும்பத்தை விட ரெஜீனாவின் குடும்பம் சற்று வசதியானது. இதனால் வடிவேலுவுக்கு தாழ்வு மனப்பான்மை இருந்துள்ளது. மேலும் அவருக்கு வேலையும் இல்லை. இதனால் அவருக்கும், ரெஜீனாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.
கருத்து வேறுபாடு முற்றியதால் கணவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்து ரெஜீனா குடும்ப கோர்ட்டில் மனு செய்தார். இதனால் ஆவேசமடைந்த வடிவேல், ரெஜீனாவைக் கொல்ல முடிவு செய்து அரிவாளுடன் வந்துள்ளார். ஆனால் கிரேனத்தின் செயலால் அது தடுக்கப்பட்டு விட்டது என்றனர்.