சென்னை புதுப்பேட்டை மெக்கானிக் கடைகளில் ரெய்ட்-ரூ. 50 லட்சம் திருட்டு என்ஜின்கள் சிக்கின
சென்னை: சென்னை புதுப்பேட்டையில் உள்ள மெக்கானிக் கடைகள், மோட்டார் வாகன உதிரி பாக கடைகளில் போலீஸார் திடீரென நடத்திய அதிரடி சோதனையில் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள திருட்டு என்ஜின்கள் சிக்கின.
சென்னை புதுப்பேட்டைக்கு தனிப் பெருமை உண்டு. ஏகப்பட்ட மெக்கானிக் கடைகள், மோட்டார் உதிரி பாக விற்பனைகள் கடைகள் இங்கு குவிந்து கிடக்கின்றன. எந்த இடத்திலும் கிடைக்காத உதிரி பாகங்களை இங்கு சர்வ சாதாரணமாக வாங்கலாம்.
புதுப்பேட்டையின் குறுகிய சந்துகளுக்குள் இந்தக் கடைகள் நிரம்பிக் கிடக்கின்றன. புதுப்பேட்டைக்கு கெட்ட பெயரும் உண்டு. அது திருட்டு வாகனங்களை இங்கு கொண்டு வந்து பிரித்து உதிரி பாகங்களாக மாற்றி விடுவார்கள் என்பதுதான்.
சென்னை நகர் மட்டுமல்லாமல் சுற்றுவட்டாரத்தில் திருடப்படும் பெரும்பாலான வாகனங்கள் புதுப்பேட்டைக்குத்தான் கொண்டு வரப்படுவதாக ஒரு புகார் நீண்ட காலமாகவே உள்ளது.
இங்கு கொண்டு வரப்படும் ஒரு மோட்டார் சைக்கிளை இங்குள்ள கடைகளில் கொடுத்தால் ஐந்து நிமிடத்தில் அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து உதிரி பாகங்களாக மாற்றி விடும் திறமைசாலிகள் இங்கு உள்ளனர்.
இந்த நிலையில் 500க்கும் மேற்பட்ட போலீஸார் புதுப்பேட்டை தட்டுமுட்டுத் தெருக்களில் நிறைந்து கிடக்கும் அனைத்து உதிரி பாக விற்பனைக் கடைகள், டீலர்களிடம் அதிரடி சோதனையில் இறங்கினர்.
இந்த சோதனையி்ல், நூற்றுக்கணக்கான மோட்டார் சைக்கிள்கள், கார்களின் என்ஜின்கள் சிக்கின. காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை இந்த சோதனை நடந்தது.
முறையான ஆவணங்கள் இல்லாமல் வைக்கப்பட்டிருந்த 335 பைக் என்ஜின்கள், 20 மூன்று சக்கர வாகன என்ஜின்கள் மற்றும் 22 இரு சக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டன. இதன் மொத்த மதிப்பு ரூ.50 லட்சம் என தெரிகிறது.
இதுதொடர்பாக மீரா சாகிப் (எ) கோயா, ஷேக் மொய்தீன், ஷாகுல் அமீது, சையது அமீது, முகமது உசேன், முகமது இஸ்மாயில், ஆசீப், பாபு ஹுசைன், தமீம், ஷேக் முகமது ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்த அதிரடி ரெய்ட் குறித்து போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சென்னையில் இரு சக்கர வாகனங்கள் அதிக அளவில் திருடப்பட்டு வந்தது தெரியவந்தது. அந்த வாகனங்கள் புதுப்பேட்டையில் விற்பனை செய்யப்படுவதும், வெளிமாநிலங்களில் விற்பனை செய்யப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதைதொடர்ந்து அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன.
திருட்டு வாகனங்களைக் கொண்டு போதைப் பொருள் கடத்தவும், கொள்ளையடிக்கவும் பயன்படுத்துகின்றனர். ஒருசிலர் வாகனங்களை திருடி விட்டு, சில நாட்கள் பயன்படுத்துகின்றனர். பின்னர் எங்காவது விட்டுச் செல்கின்றனர். என்ஜின்கள் வைத்திருந்தால் அவர்களிடம் ஆவணங்கள் இருக்க வேண்டும். அது இல்லாததால் பறிமுதல் செய்துள்ளோம்.
இவர்களிடம் விற்பனை செய்கிறவர்கள் யார்? என்ஜின்களை வாங்கிச் செல்வது யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். எல்லா வகையான பைக்குகளும் திருடப்படுகின்றன. படகுகளுக்கும் இந்த என்ஜின்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்றார்.
போலீஸாரின் இந்த அதிரடி ரெய்டால் புதுப்பேட்டை ஏரியா முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.