வீல் சேரில் பள்ளிக்குப் போகும் மகன்!-கண்கலங்கிய நெப்போலியன்
சென்னை: தசைத்திறன் குறைபாடுள்ள குழந்தைகளின் கஷ்டத்தை உணர்ந்தவன் நான். அவர்களின் கஷ்டத்தை முழுமையாக போக்கப்பாடுபடுவேன். என்மகனும் தசைத்திறன் பாதிக்கப்பட்டு வீல் சேரில்தான் பள்ளிக்குப் போகிறான், என்று கூறி கண்கலங்கினார் நடிகரும் மத்திய இணையமைச்சருமான நெப்போலியன்.
தசைத்திறன் குறைபாடுள்ளவர்கள் சிறப்பு பள்ளி ஒன்றை தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதன் தொடக்க விழாவில் மத்திய சமூக நீதித்துறை இணையமைச்சர் நெப்போலியன் பங்கேற்றார்.
விழாவில் அவர் பேசியதாவது:
தசைத் திறன் குறைபாடுள்ள குழந்தைகளின் கஷ்டத்தை நான் நேரடியாக உணர்ந்தவன். தினம் தினம் அந்தக் வேதனையை அனுபவிப்பவன்.
11 வயதாகும் என் மகன் தனுஷ் இந்த தசைத் திறன் குறைபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறான். அவனுக்கு 4 வயதில்தான் இந்த பாதிப்பு இருப்பதே தெரிந்தது. இதற்கு இன்னும் மருந்தே கண்டுபிடிக்கப்படவில்லை. அன்றாடப் பயிற்சிதான் மருந்து என்று டாக்டர் விஸ்வநாதன் கூறினார்.
இதற்கு அமெரிக்காவில் ஒரு மருந்து இருக்கிறது. அதுகூட நோயை முழுமையாகக் குணப்படுத்தாது, ஓரளவுதான் தசைத் திறனை மேம்படுத்த உதவுமாம்.
'சரி, நான் அமெரிக்கா செல்லும்போது வாங்கி வருகிறேன்' என்ற டாக்டரிடம் கூறியபோது, 'அப்படி வாங்க முடியாது, இதனை சில விளையாட்டு வீரர்கள் ஊக்கமருந்தாக பயன்படுத்துவதால் அனுமதிக்க மாட்டார்கள். மத்திய அரசிடம் கூறி முறையாகத்தான் வாங்க முடியும்' என்றார்.
மத்திய சுகாதாரத்துறை மந்திரியிடம் இதுகுறித்து நான் பேசினேன். இப்போது தேவையான மாத்திரைகள் வரவழைக்கப்பட்டுள்ளது.
என் மகனும் இப்போது வீல்சேரில்தான் பள்ளிக்கு செல்கிறான்... (உணர்ச்சிவசப்பட்டு அழுதுவிட்டார்)ஒவ்வொரு குழந்தையின் பாதிப்பும் எனக்கு தெரியும். இதுபோன்ற குழந்தைகளைக் காப்பாற்ற, சம்பந்தப்பட்ட துறையையே எனக்கு கொடுத்திருக்கிறார்கள். என்துறை மூலம் இதுபோன்ற குழந்தைகள் அனைவருக்கம் மறுவாழ்வு கொடுக்க பாடுபடுவேன்.
இன்று எனது 16-வது திருமண நாள். துணை முதல்வருக்கு 34-வது திருமண நாள்.
இந்த நாளில்தான் இதுபோன்ற பள்ளிகளைத் தொடங்க வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் துணை முதல்வரைக் கேட்டுக் கொண்டேன்", என்றார் நெப்போலியன் உணர்ச்சிமயமாக.
என் மகனுக்கும் பாதிப்பு!- மேயர்
முன்னதாகப் பேசிய சென்னை மாநகராட்சி மேயர் மா சுப்பிரமணியன், என் குடும்பத்திலும் இந்த பாதிப்பு உள்ளது. எனது 24 வயது மகன் வாய் பேச முடியாமல், தானாக எழுந்து நிற்க, நடக்க முடியாமல் இருக்கிறான். அவனை தூக்கிக்கொண்டு பயிற்சி அளிக்க சென்றிருக்கிறேன்.
இப்போது இந்த பள்ளி 4 வகுப்பறைகளுடன் தொடங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான சக்கர நாற்காலியும் மாநகராட்சியே வழங்குகிறது. மாணவர் எண்ணிக்கை கூடினால் மாடியில் இருக்கும் 4 வகுப்பறைகளும் இதற்காக லிப்ட் வசதியுடன் விரிவுபடுத்தப்படும்", என்றார்.