பிரேக்குக்குப் பதில் ஆக்சலரேட்டரை அழுத்தியதால் விபரீதம் - கார் மோதி சிறுமி பலி
சென்னை: சென்னையில் காரை பார்க் செய்த போது மகள் குறுக்கே வந்து விட்டதால் பயத்தில் பிரேக்குக்குப் பதில் ஆக்சலரேட்டரை அழுத்தினார் தந்தை. இதில் கார் சுவற்றில் மோதி அதில் சிக்கி அவரது மகள் பரிதாபமாக இறந்து போனாள்.
ஆதம்பாக்கம் தெற்கு மெயின் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார் (32). சாப்ட்வேர் என்ஜீனியர். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று ரவிக்குமார் தனது காரில் வெளியே சென்று விட்டு மதியம் வீட்டிற்கு திரும்பினார். காரை குடியிருப்பு பகுதியில் உள்ள பார்க்கிங்கில் நிறுத்த முயன்றார்.
அப்போது ரவிக்குமாரின் 5 வயது மகள் சுவேதா வேகமாக ஓடி வந்தாள். காருக்கு குறுக்கே திடீரென அவள் வந்ததால் அதிர்ச்சி அடைந்த ரவிக்குமார், பிரேக்கை அழுத்த முயன்றார். ஆனால் தவறுதலாக ஆக்சலரேட்டரில் கால் வைத்து விட்டார்.
இதனால் கார் படு வேகமாக ஓடி சுவேதாவுடன் எதிரே இருந்த சுவற்றில் நசுக்கி நின்றது. இதில் சிறுமி சுவேதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாள். அவளது தலையிலிருந்து மூளை சிதறி வெளியே வந்து விட்டது.
இதைப் பார்த்த ரவிக்குமாரின் குடும்பத்தினர், உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து போய் விட்டனர்.
ரவிக்குமார் தனது மகளின் உடலைப் பார்த்து கதறி அழுதார். போலீஸார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.