ரூ. 13 கோடியில் நவீனமாகும் தண்டையார்பேட்டை மருத்துவமனை
சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி தொற்று நோய் மருத்துவமனை ரூ. 13 கோடியில் நவீனப்படுத்தப்படவுள்ளது. இதற்கான பணிகளுக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
சென்னை தண்டையார்பேட்டையில் மாநகராட்சி தொற்று நோய் மருத்துவமனை உள்ளது. தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சிறப்பு மருத்துவமனை இது.
இங்குதான் தற்போது பன்றிக் காய்ச்சலுக்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த மருத்துவமனையை நவீனமாக்கவும், கூடுதல் கட்டடங்களைக் கட்டவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் ரூ. 13 கோடியில் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதுகுறித்து மாநகராட்சி மேயர் மா.சுப்ரமணியன் கூறுகையில், தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில், தற்போது 100 படுக்கைகள் உள்ளது. தற்போது மருத்துவமனை விரிவாக்கம் செய்து நவீனப்படுத்தப்பட உள்ளது. ரூ.13.53 கோடி செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்படவுள்ளது.
இதற்கான விழா தண்டையார் பேட்டை மருத்துவமனை முன்பு 27-ம் தேதி மாலையில் நடக்கிறது. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
அதே நிகழ்ச்சியில் வடசென்னையில் ரூ.12 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு திடல்கள், உடற்பயிற்சி கூடங்கள், சத்துணவு கூடங்கள் உள்பட 80 புதிய கட்டிடங்களையும் திறந்து வைக்கிறார் என்றார்.
தண்டையார்பேட்டை மருத்துவமனையைப் போலவே சென்னையின் தெற்கில் ஒரு புதிய தொற்று நோய் மருத்துவமனையை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு சமீபத்தில் கோரிக்கை வைத்தது என்பது நினைவிருக்கலாம்.