சிறுமிக்கு திருமணம்-தடுத்து நிறுத்திய கலெக்டர்
நாமக்கல்: சேந்தமங்கலம் அருகே பதினான்கு வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் வருவாய்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
மனு அனுப்பிய தியாகிகள்...
நாமக்கல் மாவட்டத்தில் பொட்டணம் என்ற கிராமத்தில் பால்ய விவாக திருமணம் 24 ம் தேதி திங்கள் கிழமை நடைபெற உள்ளது, அந்த திருமணத்தை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகிகள் சிலர் மாவட்ட கலெக்டருக்கு புகார் மனு அனுப்பினர்.
இது பற்றி விசாரிக்குமாறு நாமக்கல் ஆர்.டி.ஓ.ராஜனுக்கு, கலெக்டர் சகாயம் உத்தரவிட்டார்.
இதில் முசிறியை சேர்ந்த ராஜேந்திரன் மகள் கௌசல்யா (14) என்ற சிறுமிக்கும், பொட்டணத்தை சேர்ந்த செந்தில் (28) என்ற வாலிபருக்கும் மண்மலை என்ற கிராமத்தில் நேற்று திருமணம் நடக்க இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, ஆர்.டி.ஓ. ராஜன் உத்தரவின் பேரில் மண்மலை கிராமத்திற்கு விரைந்த வருவாய்துறையினர் அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
பின்பு இது குறித்து, ஆர்.டி.ஓ. ராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கொல்லிமலை சுற்றுவட்டார மலைக் கிராமங்களில் இது போன்ற பால்ய விவாகங்கள் அதிகளவில் நடக்கின்றன. அதை தடுத்து நிறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகிகள் சிலர் புகார் மனு அனுப்பிருந்தனர்.
மேலும், நேற்று நடக்க இருந்த பால்ய விவாகம் மாவட்ட கலெக்டர் உத்திரவின் பேரில் தடுத்து நிறுத்தப்பட்டது. பால்ய விவாகத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து அந்த சிறுமியி்ன் பெற்றோர்களுக்கு விளக்கி கூறப்பட்டது.
மேலும், இப் பகுதியில் பால்ய விவாகம் குறித்து விசாரணை நடத்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.