5000 ஊழியர்களை நீக்கும் ஜப்பான் ஏர்லைன்ஸ்!
டோக்கியோ: தொடர் நஷ்டம் மற்றும் நிதி நெருக்கடி காரணமாக ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது 5000 பணியாளர்களை படிப்படியாக வேலை நீக்கம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது.
பொருளாதாரச் சரிவிலிருந்து நாடு மீண்டுவிட்டதாக ஜப்பான் அரசு அறிவித்த இரு தினங்களில் வெளியாகியுள்ள அதிர்ச்சிகரமான செய்தி இது.
ஜப்பானின் மிகப்பெரிய விமானப் போக்குவரத்து நிறுவனம், ஜப்பான் ஏர்லைன்ஸ் கார்ப்பொரேஷன். ஏறத்தாழ 50000 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.
ஆனால் விமானப் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மற்றும் தொடர் நஷ்டத்திலிருந்து இந்த நிறுவனம் இன்னும் மீளவில்லை.
எனவே இந்த ஆண்டு நிறுவனத்தின் மொத்த செலவுத் தொகையில் 1.6 பில்லியன் அளவு குறைத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது ஜப்பான் ஏர்லைன்ஸ்.
எனவே வேறு வழியின்று அடுத்த இரு ஆண்டுகளுக்குள் படிப்படியாக 10 சதவிகித பணியாளர்களை அதாவது 5000 பேரை குறைப்பதாக அறிவித்துள்ளது.
பணிநீக்கம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை பல்வேறு தொழிற்சங்கங்களுடன் இப்போது அந்த நிறுவனம் தொடங்கியுள்ளதாம்.
கடந்த காலாண்டில் மட்டும் இந்நிறுவனம் சந்தித்த நஷ்டம் 99.04 பில்லியன் யென்களாகும்.