ஊழல் பெருச்சாளிகள் தப்ப சிபிஐ அனுமதிக்கக் கூடாது- மன்மோகன்
டெல்லி: ஊழலில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் தண்டனையிலிருந்து அவர்கள் தப்ப சிபிஐ மற்றும் மாநில ஊழல் தடுப்புப் பிரிவுகள் அனுமதிக்கக் கூடாது. அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த அவர்கள் கடுமையாக பாடுபட வேண்டும் என்று கூறியுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.
டெல்லியில், சிபிஐ மற்றும் மாநில ஊழல் தடுப்புப் பிரிவுகளின் மாநாட்டை இன்று பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், பெரும் புள்ளிகள் ஊழல் செய்தால் எளிதில் தப்பி வந்து விடுவார்கள். தண்டனையில் அவர்கள் சிக்க மாட்டார்கள் என்ற எண்ணம் உள்ளது. அதை பொய்யாக்கும் வகையில், சிபிஐ மற்றும் மாநில ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் செயல்பட்டு யாராக இருந்தாலும் சரி, ஊழலில் ஈடுபடுவோர் அனைவரும் தண்டனை பெறும் வகையில் பாடுபட வேண்டும். தண்டனையிலிருந்து ஒருவரும் தப்ப அனுமதிக்கக் கூடாது.
யாருக்கும் பயந்து செயல்படக் கூடாது. அனைவரையும் ஒரே மாதிரியாக நடத்த வேண்டும். ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் தளர்ச்சியே இருக்கக் கூடாது.
உயர் மட்ட அளவில் நடக்கும் ஊழல்களை கடுமையாக தடுக்க வேண்டும். அதற்கு எதிராக தீவிரமாக செயல்பட வேண்டும்.
விரைவான விசாரணை முக்கியானது. அதேசமயம், தவறு செய்தவர்கள் யாரும் சட்டத்தின் முன்னிருந்து தப்பி விடக் கூடாது.
விரைவான விசாரணை, வலுவான ஆதாங்கள், விரைவான தீர்ப்புகள் என்று இருந்தால்தான் மக்களுக்கு விசாரணை ஏஜென்சிகள் மீது நம்பிக்கை வரும்.
நாடு முழுவதும் புதிதாக 71 புதிய சிபிஐ கோர்டுகளைத் திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இவை அனைத்தும் மாதிரி நீதிமன்றங்களாக செயல்படும். இங்கு தினசரி விசாரணை நடைபெறும். தள்ளிவைப்பு என்ற பேச்சுக்கே இங்கு இடமிருக்காது.
இந்திய ஜனநாயகத்தை உலகம் மதிக்கிறது. அதன் மதச்சார்பற்ற தன்மைகள், பன்முக கலாச்சாரம், சுயாட்சி கொண்ட நீதித்துறை, பத்திரிக்கைச் சுதந்திரம், அமைதி உள்ளிட்டவை உலக நாடுகளை ஈர்த்துள்ளது.
அதேசமயம், இந்த பெருமைகளையெல்லாம் சீர்குலைக்கும் வகையில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதை ஒழிக்க அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றார் சிங்.