முதல்வர் தலைமையில் செப். 17-18 கலெக்டர்கள் மாநாடு
சென்னை: முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில் செப்டம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.
ஆண்டுதோறும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகளின் மாநாடு நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு ஜூன் மாதம் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இந்த மாநாடு நடந்தது.
இந்த நிலையில், வருகிற செப்டம்பர் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் நாமக்கல் கவிஞர் மாளிகையில், கலெக்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெறவுள்ளது.
முன்னதாக, செப்டம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் இந்த கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், நேற்று முன்தினம், இந்த தேதியில் மாற்றம் செய்யப்பட்டு, இறுதி செய்யப்பட்டது.
செப்.17ம் தேதி முதல்வரின் தலைமை உரையுடன் மாநாடு தொடங்கி வைக்கப்படும்.
மாநாட்டில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை டிஜிபி, ஐஜிக்கள், ஏடிஜிபிக்கள், டிஐஜிக்கள், மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்பர்.
இந்த மாநாட்டில், ரவுடிகளை அடக்குவது, தீவிரவாதத்தை முறியடிப்பது உள்பட சட்டம்-ஒழுங்கு தொடர்பான விஷயங்கள் குறித்து அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், சரக ஐ.ஜி. மற்றும் டி.ஐ.ஜிகளுடன் முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.
இதுபோல், தமிழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள், இலவச கலர் டி.வி, காஸ் அடுப்பு, இலவச அரிசி போன்ற திட்டங்களின் அமலாக்கம், அவற்றை துரிதப்படுத்துவது பற்றியும் ஆலோசனைகளை கருணாநிதி வழங்குவார்.
இதுதவிர, ரேஷன் அரிசி கடத்தல், இலங்கை தமிழர் பிரச்சினை, மின்வினியோகம், தொழில் வளர்ச்சி உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில், சம்பந்தப்பட்ட துறைகளின் செயலாளர்கள், துறை தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்