செப். 2 முதல் மருந்துக் கடைகளில் டாமிப்ளூ விற்பனைக்கு அனுமதி
டெல்லி: பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை நூறை நெருங்கி வரும் நிலையில் அதற்குரிய மருந்தான டாமிப்ளூவை மருந்துக் கடைகள் மூலம் விற்பனைக்கு அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. செப்டம்பர் 2ம் தேதி முதல் திறந்த மார்க்கெட்டில் டாமிப்ளூ கிடைக்கும் என தெரிகிறது.
இதுகுறித்து இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநர் சுரீந்தர் சிங் கூறுகையில், பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்து வகையான ஒசெல்டமிவிர் (Oseltamivir) மருந்து விற்பனையை திறந்த மார்க்கெட்டில் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.
இதுதொடர்பான முறையான அனுமதி அறிவிப்பு இன்னும் 10 அல்லது 12 நாட்களில் வெளியாகும். சில்லரை மருந்துக் கடைகளில் இந்த மருந்துகள் விற்பனை செய்ய அனுமதிக்கப்படும்.
இந்த மருந்தைத் தயாரிக்கும் லைசென்ஸ், ரான்பாக்ஸி, சிப்லா, மெட்கோ, ஹெடிரோ, ஸ்டிரைட்ஸ், ரோச் ஆகிய நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மருந்துகளைத் தயாரித்து, விநியோகம் செய்வார்கள் என்றார்.
இதற்கிடையே, மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தம் உள்ள 34 மாவட்டங்களில் 22 மாவட்டங்களில் பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளது. இதில் அதிகம் பாதிப்புகளைச் சந்தித்திருக்கும் மாவட்டங்கள் புனே, மும்பை, நாசிக் ஆகியவைதான்.
மகாராஷ்டிராவுக்கு அடுத்த அதிக உயிர்ப் பலி ஏற்பட்டுள்ளது கர்நாடகத்தில்தான்.