வீடுகளை கையகப்படுத்துவதை கண்டித்து செப். 1ல் போராட்டம்- ஜெ.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி, அமைந்தகரை 73-வது வட்டத்திற்குட்பட்ட வெள்ளாளத் தெரு, சபாபதி தெரு, பெருமாள் கோயில் தெரு, எஸ்.எஸ். சாயீப் தெரு, கிழக்கு அரசமரத் தெரு, தெற்குகாசத்தோட்டம், சுண்ணாம்பு கால்வாய் தெரு, கன்னைய்யா செட்டி தெரு, நல்ல முத்துமாரியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் சுமார் 12,000-ற்கும் மேற்பட்ட ஏழை-எளிய மக்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் வசிக்கும் பகுதிகள் அனைத்தும், வட்டார எண்கள் 23, 24, 26, 30 ஆகியவற்றிற்கு உட்பட்டவை.
தமிழக அரசின் பொதுப்பணித்துறை, வட்டார எண் 31 என்று குறிப்பிட்டு, தங்கள் வீடுகளை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது என்று கேட்டு, வட்டார எண் 31-ல் வசிக்கும் மக்களுக்கும், அதற்கு தொடர்பில்லாத மேற்படி பகுதிகளில் வசித்துவரும் மக்களுக்கும் அறிவிப்பு ஒன்றினை அனுப்பியுள்ளது.
துறைமுகம் - மதுரவாயல் விரைவுப்பாதை என்ற காரணத்தைக் காட்டி தலைமுறை, தலைமுறையாக இப்பகுதியில் வசித்து வரும் ஏழை-எளிய மக்களை துரத்தி அடிக்க நினைக்கும் முயற்சிக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஏழை-எளிய மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அறிவிப்புகளை திரும்பப்பெற வலியுறுத்தியும், துறைமுகம்-மதுரவாயல் விரைவுப்பாதை அமைக்க கூவம் ஆற்றின் மறுகரையில் உள்ள இடத்தை பயன்படுத்த வலியுறுத்தியும் தென் சென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில், வருகின்ற 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி அளவில், சென்னை, சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக தேர்தல் பிரிவு இணைச்செயலாளர் பாலகங்கா, எம்.பி., தலைமையிலும், தென் சென்னை மாவட்டக்கழகச் செயலாளர் வி.பி. கலைராஜன், எம்.எல்.ஏ. முன்னிலையிலும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.