இந்தியப் பொருளாதாரத்திற்கு நற் செய்தி - ஜிடிபி 6.1 சதவீதமாக உயர்வு
கடந்த நிதியாண்டின் கடைசிக் காலாண்டின்போது இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 5.8 சதவீதமாக இருந்தது. இந்த நிலையில் 6.1 சதவீதமாக அது வளர்ச்சி பெற்றுள்ளது இந்திய பொருளாதாரம் தலை நிமிரத் தொடங்கி விட்டதையே காட்டுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியப் பொருளாதாரத்திற்கு இது பெரும் நற் செய்தி என்றும் பொருளாதார நிபுணர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
ஓராண்டுக்கு முன்பு இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி காலாண்டுக்கு 8 சதவீதம் என்ற நிலையில் இருந்தது. ஆனால் இடையில் குறுக்கிட்ட உலகப் பொருளாதார மந்த நிலையால் ஜிடிபி வளர்ச்சி விகிதம் சரியத் தொடங்கியது. இந்த நிலையில் மறுபடியும் அது வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ளது.
இதுகுறித்து மத்திய புள்ளியியல் கழகம் கூறுகையில், நாட்டில் நிலவும் கடும் வறட்சி நிலைமை, முதல் காலாண்டில் பிரதிபலிக்கவில்லை. இருப்பினும் அடுத்து வரும் காலாண்டுகளில் இதன் தாக்கத்தை உணரலாம். இருப்பினும் கூட பொருளாதார வளர்ச்சி 6 சதவீதம் என்ற அளவிலிருந்து மாறும் வாய்ப்பில்லை.
அதேசமயம் 2 மற்றும் 3வது காலாண்டில் இந்தியப் பொருளாதாரத்தில் லேசான சரிவை நாம் எதிர்பார்க்கலாம்.
வரும் மாதங்களில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தும் என்று எதிர்பார்க்க முடியாது.
இந்த காலாண்டில் விவசாயத் துறை வளர்ச்சி 2.4 சதவீதமாக இருந்தது. இதுவே கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 3 சதவீதமாக இருந்தது.
சேவைப் பிரிவின் வளர்ச்சி விகிதம் 7.8 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு இது 10.2 சதவீதம்.
சுரங்கப் பிரிவின் வளர்ச்சி 7.9 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு இது வெறும் 4.6 சதவீதமாகத்தான் இருந்தது.
உற்பத்திப் பிரிவின் வளர்ச்சி கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 5.5 சதவீதமாக இருந்த இந்த முதல் காலாண்டில் 3.4 சதவீதமாக குறைந்துள்ளது.
மின் துறையின் வளர்ச்சி 6.2 சதவீதமாகவும், கட்டுமானப் பிரிவின் வளர்ச்சி 7.1 சதவீதமாகவும் உள்ளது என்று தெரிவித்துள்ளது.