சென்னையில் சிக்கிய கும்பலுக்கு நெல்லை சிலை திருட்டிலும் தொடர்பு!
நெல்லை: சென்னையில் பிடிபட்ட சிலை கொள்ளையர் மூவருக்கு நெல்லையில் நடந்த சிலை கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி வரதராஜ பெருமாள் கோயிலில் கடந்த ஆண்டு ஒன்றரை கோடி மதிப்பிலான 18 ஐம்பொன் சிலைகள் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இதேபோல் பாளையங்கோட்டை அரசு அருட்காட்சியகத்தில் கடந்த ஜூன் மாதம் தேவி, ராமர், மயிலுடன் முருகன், வினாயகர், காளிதேவி மற்றும் நடனமாது ஆகிய 6 ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும்.
எஸ்பி அலுவலகம் அருகே நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் போலீசாரை அதிர்ச்சியடைய செய்தது.
கொள்ளையர்கள் குறித்து சரியான துப்பு கிடைக்காததால் அவர்களை பிடிக்க முடி்யாமல் போலீசார் திணறி வந்தனர்.
இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சிலை கடத்தல் கும்பல் சுற்றுவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் காதர் பாட்ஷா, தலைமையில் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை நிறுத்த கை காட்டினர். ஆனால் அது நிற்காமல் சென்றது. போலீசார் விரட்டி சென்று அதனை மடக்கி பிடித்தனர்.
காரில் சோதனை செய்தபோது அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சாக்கு பையில் 2 விஷ்ணு, 2 பாலமுருகன், 2 ஆழ்வார் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய சிலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒன்றரை கோடி மதிப்பிலான இந்த சிலைகள் அனைத்தும் ஐம்பொன் சிலைகள் ஆகும்.
சிலைகளை பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்த மைசூரை சேர்ந்த ஸ்ரீராம், ராசிபுரம் முருகேசன், சுகுமாறன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இவர்கள் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் உள்ள கோயில்களில் சிலைகளை திருடி வெளிநாட்டிற்கு கடத்தி வருவது தெரிய வந்துள்ளது.
நெல்லை சுத்தமல்லி வரதராஜ பெருமாள் கோயிலில் கடந்த ஆண்டு கொள்ளையடிக்கபபட்ட ஐம்பொன் சிலைகள் தற்போது பாங்காங்கில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே இக்கும்பலுக்கு நெல்லை அருட்காட்சியக சிலை கொள்ளையில் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.