சத்தியமங்கலத்தில் ஏழு மாநில கமாண்டோ படையினருக்கு பயிற்சி
சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தில், ஏழு மாநிலங்களை சேர்ந்த கமாண்டோ படையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக தமிழக அதிரடிப்படை ஐஜி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகள் 82 பேருக்கு சமீபத்தில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
இதை தொடர்ந்து கடந்த மாதம் 24 ம் தேதி முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 50 வனக்காப்பாளர்களுக்கு ஏழு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் நிறைவு விழா புதுபீர்கடவு வனப்பகுதியில் நடைபெற்றது.
விழாவில் தமிழக அதிரடிப்படை ஐஜி சைலேந்திரபாபு கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
தமிழக அதிரடிப்படை சத்தியமங்கலம், மேட்டூர், ஒகேனக்கல், பழனி, ராஜபாளையம், மணிமுத்தாறு, பொன்னை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது.
அவர்கள் தமிழக வனப்பகுதிகளில் முழுமையாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் தீவிரவாதிகளோ, சமூக விரோதிகளோ இல்லை.
இதுவரை வனப் பொருள்களை கொள்ளையடிக்கும் எட்டு பேரை கைது செய்துள்ளோம். வனக்காப்பாளர்களுக்கு புதுவிதமான பயிற்சிகள் கற்று தரப்பட்டுள்ளது. இது, அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இங்கு இந்தியாவின் ஏழு மாநிலங்களை சேர்ந்த கமாண்டோ படையினருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.