ரெட்டி மறைவின் அதிர்ச்சியில் இதுவரை 500 பேர் மரணம்
ரெட்டி மரணமடைந்த முதல் நாளே 67 பேர் மாரடைப்பாலும் 20 பேர் தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்தனர்.
இனி யாரும் தயவு செய்து தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என அவரது மகன் ஒய் எஸ் ஆர் ஜெகன்மோகன் ரெட்டி விடுத்த வேண்டுகோள் எந்தப் பலனையும் தரவில்லை.
அவரது இறுதிசடங்கு காட்சிகளை டி.வி.யில் பார்த்தபோது 178 பேர் பலியானதாக ஆந்திர மாநில அரசு அறிவித்திருந்தது.
இப்போது ராஜசேகர ரெட்டிக்காக உயிரை மாய்த்துக் கொண்டவர்களின் எண்ணிக்கை 500-ஐ நெருங்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. நேற்று வரை 494 பேர் உயிரிழந்ததாக தெலுங்கு நாளிதழ் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று ஒரே நாளில் மட்டும் ஆந்திராவில் 79 பேர் பலியாகியுள்ளனர். கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 12 பேரும், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் 7 பேரும், அனந்தபுரம் மாவட்டத்தில் 3 பேரும், குண்டூரில் 7 பேரும், அதிலாபாத்தில் 10 பேரும், கிருஷ்ணா மாவட்டத்தில் 6 பேரும், நிஜாமாபாத்தில் 2 பேரும், கர்னூலில் 7 பேரும், கரீம்நகரில் 10 பேரும், நல்கொண்டாவில் 9 பேரும், ஐதராபாத், ஜுப்ளி ஹில்ஸ், மெகபூப் நகர், விஜயநகரம், ஸ்ரீகாகுளத்தில் தலா ஒருவரும் பலியாகியுள்ளனர். இவர்கள் அனைவருமே ராஜசேகர ரெட்டியின் தீவிர விசுவாசிகள் என உள்ளூர் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தவிர ராஜசேகர ரெட்டி மரணம் அடைந்த அதிர்ச்சியில் துபாயிலும் ஒருவர் உயிரிழந்ததாக நேற்று செய்தி வெளியாகியுள்ளது.