ஸ்வைன்: மேலும் 9 பேர் பலி-இந்தியாவில் 125 பேர் மரணம்
பெங்களூர்: பன்றி காய்ச்சல் நோய்க்கு நேற்று மட்டும் சுமார் 9 பேர் இறந்துள்ளனர். இவர்களில் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் 6 பேர். இதையடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது.
இது குறித்து கர்நாடக மாநில சுகாதார துறை அதிகாரியும், பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்க பிரிவின் தலைவர் வாசுதேவ் மூர்த்தி கூறுகையில்,
கடந்த 24 மணி நேரத்தில் கர்நாடகாவில் 6 பேர் பன்றி காய்ச்சலுக்கு பலியாகி இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் பன்றி காய்ச்சல் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடைசியாக இறந்த பெண்ணுக்கு 38 வயது என்றார்.
ஆந்திராவில் இருவர்...
ஆந்திராவில் ஹைதராபாத் மார்பக சளி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த 38 வயதான ரூபா தேவி என்ற பெண்ணும் நேற்று இந்த காய்ச்சலுக்கு பலியாகி உள்ளார். அந்த ஹைதராபாத்தின் போலக்பூர் பகுதியை சேர்ந்தவர் என தெரிகிறது.
அம்மாநிலத்தில் கடப்பா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட லட்சுமி தேவி என்ற பெண்ணும் மரணமடைந்தார்.
இதை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் ஒருவர் பன்றி காய்ச்சலுக்கு பலியாகியுள்ளார். அவரது பெயர், ஊர் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.
மகாராஷ்டிரா, கர்நாடகாவில் 100 பேர்...
இதையடுத்து இந்தியா முழுவதும் சாவு எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 59, கர்நாடகாவில் 41 பேர் இறந்துள்ளனர். அதாவது, இந்த இரு மாநிலங்களில் மட்டும் 100 பேர் இறந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications