ஜெ. மீதான ரூ. 2 கோடி பரிசு வழக்கு-சிபிஐக்கு உத்தரவு
சென்னை: ரூ. 2 கோடி பரிசுப் பொருள் வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதிலளிக்குமாறு சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1992ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா தனது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அவருக்கு ரூ.2 கோடி அளவுக்கு வங்கி டி.டிக்கள் மூலம் பரிசு வழங்கப்பட்டது.
அதை அரசு கஜானாவில் சேர்க்காமல் தனது வங்கிக் கணக்கில் இருப்பு வைத்துக் கொண்டார் ஜெயலலிதா.
பின்னர் ஆட்சிக்கு வந்த திமுக இந்த விவகாரத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்தது. பின்னர் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
ஜெயலலிதா தவிர முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோருக்கு எதிராக சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த 2006ம் ஆண்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந் நிலையில் இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஜெயலலிதா சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 13(2), 13(1)(இ) ஆகியவற்றின் கீழ் முதலில் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்தது. பின்னர் சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இவ்வாறு மாற்றம் செய்வதற்கு தமிழக அரசுக்கு அதிகாரமில்லை.
இந் நிலையில் விசாரணை நடத்திய சிபிஐ, ஊழல் தடுப்புச்சட்டம் பிரிவு 11ன் கீழ் என் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இது விதிகளை மீறிய செயலாகும்.
கட்சியின் பொதுச்செயலாளர் என்ற முறையில் கட்சியினர் என் மீது கொண்ட அன்பு, பாசம், விசுவாசம் காரணமாக வழங்கிய பரிசுப் பொருட்கள் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றமாகாது.
எனக்கு எதிராக வழக்கு தொடர சபாநாயகர் அனுமதி வழங்கியதும் சட்டப்படி செல்லாது.
எனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை. எனவே என்னை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதி முகமது இசாத்அலி முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி வரும் 16ம் தேதிக்குள் இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
இதற்கிடையே இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்களை பதிவு செய்ய காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என்று கோரி சிபிஐ தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications