ஈழத் தமிழர்களுக்கு உதவுவோம்-காங். எம்பி
சென்னை: அனைத்து அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஈழத் தமிழர்கள் நலனைக் கருத்தில் கொண்டு ஒன்றுபட வேண்டும். ஈழத் தமிழர்கள் இழந்த உரிமைகளை மீண்டும் மீட்டுத் தர அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பன் கூறியுள்ளார்.
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இதுவரை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பெரிய அளவில் குரல் கொடுக்காமல் இருந்து வருகிறது. பொத்தாம் பொதுவாகத்தான் அவர்கள் பேசி வருகிறார்கள்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன், ஈழத் தமிழர்கள் இழந்த உரிமைகளை மீண்டும் மீட்டெடுக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அறிக்கை மூலம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக நாச்சியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை...
லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் படும் துயரங்களுக்கு முடிவு கட்ட அனைத்து அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.
ஒரு காலத்தில் ஈழத் தமிழர்களின் துயர் துடைக்க தமிழகத்தை உலக தமிழ் சமுதாயம் எதிர்நோக்கியிருந்தது. ஆனால் இன்று அவர்கள் தமிழகத்திலிருந்து தங்களது கவனத்தை திருப்பத் தொடங்கியுள்ளனர். இதை நாம் உணர வேண்டும்.
25 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர் பகுதிகளில் இருந்த நிலைமை அங்கு மீண்டும் திரும்ப வேண்டும். இழந்த பகுதிகளை மீட்பதிலும், சுதந்திரக் குடியுரிமை, விவசாய நிலங்கள், தொழிற்சாலைகள், வழிபாட்டுத் தலங்களை நாம் தமிழர்களுக்கு மீட்டுக் கொடுக்க வேண்டும்.
சைவமும், தமிழும், விவசாயமும், வர்த்தமுகம், தொழிலும் கல்வியும், மதமும் தழைத்தோங்கிய ஈழத்தில் மீண்டும் அவை துளிர்விட்டுத் தழைக்க உலக சமுதாயம் பாடுபட வேண்டும்.
இதை மனதில் கொண்டு ஒருவர் மீது ஒருவர் தவறு கற்பிப்பதை கைவிட்டு விட்டு அனைத்து அரசியல் கட்சிகளும், தமிழர் அமைப்புகளும் ஒருங்கிணைந்து ஒன்றாக செயல்பட வேண்டும். அப்படி இல்லாமல் பிளவுபட்டு செயல்பட்டால் அது இலங்கையில் தற்போது பெரும் அவதிக்குள்ளாகியுள்ள லட்சக்கணக்கான தமிழர்களின் துயரங்களை பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பாக அமைந்து விடும்.
காங்கிரஸ் கட்சி ஒருபோதும் ஈழத் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டதில்லை. அவர்களின் நலனை புறக்கணித்ததில்லை.
மத்தியில் இருந்த அரசுகள் எப்போதுமே தமிழக அரசியல் தலைவர்களின் பேச்சை தட்டியதில்லை. கடந்த 60 ஆண்டுகளாக தமிழகத்தைச் சேர்ந்த பலரும் மத்திய அமைச்சரவைகளில் முக்கியப் பதவிகளை வகித்துள்ளனர். எனவே மத்தியில் உள்ள அரசு, தமிழர் விரோத அரசு என்று கூறுவது தவறானது.
தங்களது வேறுபாடுகளை மறந்து அனைத்து அரசியல் தலைவர்களும், இலங்கையில் நிரந்தரத் தீர்வு ஏற்பட, உருவாக பாடுபட முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார் நாச்சியப்பன்.