மிஸஸ் என்று செங்கோட்டையன் கூறியுள்ளதை விளக்குவாரா ஜெ. - ஆற்காடு கேள்வி
சென்னை: ஜெயலலிதா மீதான வெளிநாட்டுப் பரிசு வழக்கில் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள செங்கோட்டையன், மிஸஸ் ஜெயலலிதா என்று கூறியுள்ளது குறித்து நாட்டு மக்களுக்கு ஜெயலலிதா விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் அமைச்சர் ஆற்காடு வீராசாமி.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த மாதம் முதல்வர் கருணாநிதி, பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது ஜெயலலிதாவை திருமதி ஜெயலலிதா' என்று குறிப்பிட்டிருந்தார். இதை பத்திரிகைகளில் படித்துவிட்டு, அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதாவும், அவரை ஆதரிப்பதே தொழிலாகக் கொண்டுள்ள சில பத்திரிகைகளும் முதல்வர் கருணாநிதி ஜெயலலிதாவை திருமதி ஜெயலலிதா என்று கூறலாமா? என கண்டித்து எழுதினார்கள்.
ஆனால், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது வெளிநாட்டில் இருந்து பரிசாக அனுப்பிய மூன்று லட்சம் டாலர் (சுமார் 2 கோடி ரூபாய்) யார் அனுப்பினார்கள்? எதற்காக அனுப்பினார்கள்? என்று சி.பி.ஐ. ஜெயலலிதாவை கேட்டபோது, எனக்கு எதுவும் தெரியாது. யார் அனுப்பினார்கள் என்பதும் தெரியாது. எங்கிருந்து வந்தது என்பதும் தெரியாது என்று தெரிவித்த ஜெயலலிதா, பரிசுத் தொகையை மட்டும் அவருடைய வங்கிக் கணக்கிலே போட்டுக் கொண்டார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள் வெளிநாட்டில் இருந்து வந்த பணத்தை முறைகேடாக ஜெயலலிதா வங்கிக் கணக்கில் சேர்த்துக் கொண்டதை எதிர்த்து சென்னை முதன்மை நீதிமன்றத்தில் 1996-ம் ஆண்டு ஜெயலலிதா மீது வழக்கு பதிவு செய்து அந்த வழக்கு இன்று வரையில் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் அந்த வழக்கின் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த கே.ஏ.செங்கோட்டையன் 20-8-2009 அன்று அதே நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் 2-ம் பக்கத்தில் குறிப்பிடும்போது, இந்த வழக்கில் இருந்து தன்னையும், ஜெயலலிதாவையும் விடுவிக்க வேண்டுமென்று குறிப்பிடும்போது ஆங்கிலத்தில் திருமதி ஜெயலலிதா என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது தன்னையும், மிஸஸ் ஜெயலலிதாவையும் விடுவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதாவை கருணாநிதி, திருமதி என்று குறிப்பிடும்போது பூமிக்கும், ஆகாயத்திற்கும் குதித்து கண்டனம் தெரிவித்தவர்கள், நீதிமன்றத்தில் ஜெயலலிதாவை திருமதி ஜெயலலிதா என்று செங்கோட்டையன் குறிப்பிடும்போது மட்டும் அவர்களுக்கு இனிப்பாக இருக்கிறதா? கலைஞர் குறிப்பிடும்போது மட்டும் கசக்கிறதா? என்பதை ஜெயலலிதாதான் நாட்டிற்கு விளக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஆற்காடு வீராசாமி.