அண்ணா நாணயம் புழக்கத்துக்கு வராது-அதிமுக
கடலூர்: அண்ணா உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட முதல்வர் கருணாநிதிக்கு இப்போது தான் ஞானோதயம் வந்துள்ளது. ஆனால், இந்த நாணயம் மக்கள் புழக்கத்திற்கு வராது என அதிமுக எம்பி செம்மலை கூறினார்.
கடலூர் நகர அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் மஞ்சக்குப்பத்தில் நடைபெற்றது. இதில் செம்மலை பேசுகையில்,
முதல்வர் கருணாநிதி அண்ணா பெயரை சொல்லியும், தன்னை முன்னிலைப்படுத்தியும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பார்க்கிறார். அவருக்கு அண்ணா மீது பாசம் இல்லை. தேவைப்படும் போது மட்டும் அண்ணா பெயரை பயன்படுத்துவார்.
அண்ணா உருவம் பொறித்த நாணயத்தை மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டார். இதற்கான ஏற்பாடுகளை செய்ய முதல்வர் கருணாநிதிக்கு இப்போதாவது ஞானோதயம் வந்துள்ளது என மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் அவர்கள் இந்த நாணயம் மக்கள் புழக்கத்திற்கு விடமாட்டார்கள்.
இந்தியாவில் 11 மாநிலங்கள் வறட்சியால் பாதித்ததாக மத்திய அரசிடம் அறிக்கை அளித்து நிதி பெற்றுள்ளன. மத்திய அரசு அந்த மாநில விவசாயிகளுக்கு மின்சாரம் மற்றும் டீசல் ஆகியவற்றை மானிய விலையில் வழங்குகிறது.
ஆனால், தமிழகத்தில் வறட்சியால் பாதித்த 16 மாவட்டங்கள் பற்றி முதல்வர் கருணாநிதி மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பவில்லை. மக்கள் நலனில் அக்கறையில்லாத அரசாக திமுக உள்ளது என்றார்.