ஸ்ரீரங்கம் ஜீயர் மட கோயில்-திறக்க ஹைகோர்ட் உத்தரவு
மதுரை: திருச்சி ஸ்ரீரங்கம் பலஹரி புருசோத்தம ராமானுஜ ஜீயர் மடத்திலுள்ள சீனிவாச பெருமாள் கோயிலை பக்தர்கள் தரிசிக்க திறக்கும்படி திருச்சி போலீஸ் கமிஷனருக்கு மதுரை உயர் நீதி மன்ற கிளை உத்தரவிட்டது.
ஸ்ரீரங்கத்தில் பலஹரி புருசோத்தம ராமானுஜ ஜீயர் மடம் உள்ளது. மடாதிபதி லட்சுமண ராமானுஜ ஜீயர் (88) மாயமானதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில், வைஷ்ணவ தர்மசம்ரக்ஷண சபை தலைவர் கோவிந்த ராமானுஜர் தாசா மதுரை உயர் நீதி மன்ற கிளையில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து, ஜீயர் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து மனு பைசல் செய்யப்பட்டது.
இம் மனு விசாரணையின் போது மடத்திலுள்ள சீனிவாச பெருமாள் கோயிலை, மடத்திலுள்ள ஜீயரின் உதவியாளர் பத்ரி, அவரது மனைவி கோதராணி திறக்க மறுப்பதாகவும், பக்தர்கள் சிரமத்திற்குள்ளாவதாகவும் கோவிந்த ராமானுஜ தாசா குற்றம் சாட்டினார்.
இது குறித்து தனி நீதிபதி விசாரணைக்கு பெஞ்ச் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இதை விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம், ஏற்கனவே பெஞ்ச் விசாரணையின் போது சீனிவாச பெருமாள் கோயிலை திறக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி பக்தர்கள் சிரமும் இன்றி தரிசனம் செய்ய கோயிலை திறக்க போலீஸ் கமிஷனர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications