வன்னியர் சொத்து நல வாரியம்-பாமக வரவேற்பு
விழுப்புரம்: தமிழக அரசு வன்னியர் பொதுச் சொத்துகள் நல வாரியத்தை அமைப்பதற்கு பாமக வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக் கட்சியின் எம்எல்ஏக்கள் செந்தமிழ்செல்வன், கலிவரதன் ஆகியோர் கூறுகையில்,
வன்னியர் சங்கம் சார்பில் வரும் 17ம் தேதி தனி இடஒதுக்கீடு மற்றும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி மாநாடு நடைபெறுகிறது.
இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளின் கிராமங்களில் சமுதாயக் கூடங்களை அமைக்க அன்புமணி ராமதாஸ் முடிவு செய்துள்ளார். தனது மாநிலங்களவை உறுப்பினர் நிதி மூலம் இதை அவர் அமைக்கவுள்ளார்.
வன்னியர் பொதுச் சொத்துக்கள் நல வாரியத்தை முதல்வர் கருணாநிதி அமைத்துள்ளார். இதனால் வன்னியர்களுக்கு பயன் ஏற்பட்டால் அதை வரவேற்போம். வன்னியர்களின் ஏராளமான சொத்துக்கள் பலரது ஆக்கிரமிப்பில் உள்ளன என்றார்.
கருணாநிதி..என்னையும் அழையுங்கள்...:
இந் நிலையில் பாமக சார்பில், சென்னையில் 'இப்தார்' நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. அதி்ல் பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,
வழக்குகள் ஏதுமின்றி பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று இஸ்லாமிய சமுதாயம் விரும்புகிறது. இதுகுறித்து முதல்வர் கருணாநிதியிடம் முறையிட என்னையும் அழையுங்கள். நானும் வருகிறேன். இல்லாவிட்டால், முதல்வரிடம் நான் அழைத்துச் செல்கிறேன்.
பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும், இடஒதுக்கீட்டில் இஸ்லாமிய சமுதாயத்துக்கு ஓரளவு நியாயம் கிடைத்திருக்கிறது. ஆனால், சில குறைகள் உள்ளன. அவற்றைப் போக்க போராடுவோம். அதில் வெற்றி பெறுவோம் என்றார்.