காந்தமால் பாதிரியார் கொலை- ஐவருக்கு ஆயுள் தண்டனை
புவனேஸ்வர்: நாட்டை உலுக்கிய காந்தமால் கலவரத்தில், பாதிரியார் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரிசாவின் காந்தமால் மாவட்டத்தில் வி.எச்.பி. தலைவர் லட்சுமாணந்த சரஸ்வதி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து அங்கு கிறிஸ்தவர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது.
நூற்றுக்கணக்கான சர்ச்சுகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. ஆயிரக்கணக்கானோரின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
இந்தக் கலவரம் தொடர்பாக 827 வழக்குகளைத் தொடர்ந்தது ஒரிசா அரசு. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குற்றம் சாட்டப்பட்டனர். இதில் 437 வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. கன்னியாஸ்திரி ஒருவர் கற்பழிக்கப்பட்ட வழக்கு உள்பட 354 வழக்குகள் விசாரணை அளவில் உள்ளன.
இந்த வழக்குகளை விசாரிக்க 2 விரைவு நீதிமன்றங்களை ஒரிசா அரசு அமைத்தது.
இந்த நிலையில், காந்தமால் மாவட்டம் ததமஹா கிராமத்தில் உள்ள ஒரு சர்ச்சில் பாதிரியாராக இருந்து வந்த அக்பர் திகால் என்பவரை கொலை செய்த வழக்கில், சபீதா பிரதான், பாபு பிரதான், அபினாஷ் பிரதான், தர்மராஜ் பிரதான், மனியா பிரதான் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி சோபன் குமார் தாஸ் தீர்ப்பளித்தார்.
இவர்களையும் சேர்த்து இதுவரை காந்தமால் கலவரம் தொடர்பான வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே 12 பேருக்கு நான்கு முதல் 6 ஆண்டு கடுங்காவல் தண்டனை வரை விதிக்கப்பட்டுள்ளது. தற்போதுதான் முதல் முறையாக ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications