மருத்துவமனையாகும் கோபாலபுரம் வீடு - பத்திரத்தில் கையெழுத்திட்ட அழகிரி, ஸ்டாலின், தமிழரசு
சென்னை: முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் ஏழைகளுக்கு சிகிச்சை அளிக்கும் இலவச மருத்துவமனையாகிறது. இந்த மருத்துவமனைக்கு அஞ்சுகம் முத்துவேலர் மருத்துவமனை என பெயரிடப்படுகிறது. இதுதொடர்பான பத்திரப் பதிவு நேற்று நடந்தது.
முதல்வரின் மகன்களான அழகிரி, ஸ்டாலின், தமிழரசு ஆகியோர் இதுதொடர்பான பத்திரத்தில் கையெழுத்திட்டு முதல்வரிடம் ஒப்படைத்தனர்.
உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் தொடக்க விழா நடைபெற்றபோது அந்த மேடையில் முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிவிப்பில் கோபாலபுரத்தில் அவர் தற்போது வசித்து வரும் இல்லத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு 1968-ல் தன் பிள்ளைகளின் பெயரில் செட்டில்மென்ட் எழுதி பதிவு செய்துள்ளதாகவும், தற்போது அந்த இல்லத்தினை தன்னுடைய காலத்திற்கு பிறகும், தன் துணைவியார் தயாளுஅம்மாள் காலத்திற்கு பிறகும், தமிழக அரசுக்கோ, அல்லது கலைஞர் அறக்கட்டளைக்கோ உடைமையாக்குவது என்றும், அந்த இல்லத்தில் ஒரு இலவச மருத்துவமனையினை தன் தாய் தந்தையர்களான அஞ்சுகம் முத்துவேலர் பெயரில் நடத்துவதென்றும், அதற்கு தன் மனைவி, மற்றும் பிள்ளைகளின் ஒப்புதலையும் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அந்த அறிவிப்பினையொட்டி நேற்று முதல்வரின் புதல்வர்கள் மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு ஆகிய மூவரும் அவர்கள் பெயரால் 1968-ஆம் ஆண்டு செட்டில்மென்ட் செய்யப்பட்டிருந்த அந்த இல்லத்தினை முதல்வர் அறிவித்தவாறு அஞ்சுகம் முத்துவேலர் பெயரில் இலவச மருத்துவமனையினைத் தொடங்குவதற்கு ஏதுவாக, பத்திரப்பதிவாளர் முன்னிலையில் கையெழுத்திட்டு முதல்வரிடம் ஒப்படைத்தார்கள்.
இந்த நிகழச்சியின்போது முதல்வரின் துணைவியார் அப்போது தயாளு அம்மாள் உடன் இருந்தார்