திமுக விழா-அண்ணா வீட்டில் கருணாநிதி
இன்று மாலை நடைபெறும் முப்பெரும் விழாவில் கருணாநிதிக்கு அண்ணா விருது வழங்கப்படுகிறது.
அண்ணா நூற்றாண்டையொட்டி ஆண்டு முழுவதும் தி.மு.க. சார்பில் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டன. நூற்றாண்டு நிறைவு விழாவை பிரமாண்டமாக கொண்டாடவும், அண்ணா பிறந்த ஊரான காஞ்சீபுரத்திலேயே விழாவை கொண்டாடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா, பெரியார் பிறந்த நாள் மற்றும் தி.மு.க. நிறுவன நாள் விழா ஆகிய முப்பெரும் விழா இன்று காஞ்சீபுரத்தில் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்பதற்காக முதல்வர் கருணாநிதி காஞ்சிபுரம் சென்றுள்ளார். காஞ்சிபுரம் எல்லையில், பெங்களூர் நெடுஞ்சாலையில் பொன்னேரிக்கரை அருகே அமைக்கப்பட்டுள்ள அண்ணா நினைவு தூணை காலை அவர் திறந்து வைத்தார்.
இதையடுத்து அவர் பாலுசெட்டி சத்திரத்தில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு சென்றார்.
அதன் பின்னர் கன்னிகாபுரத்தில் நடக்கும் முப்பெரும் விழா மாநாட்டுக்கு சென்றார். அங்கு தி.மு.க. அறக்கட்டளை சார்பில் மேல்நிலைப்பள்ளி தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு நிதியுதவிகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.
பின்னர், முரசொலி அறக்கட்டளை சார்பில் பாரதிதாசன் பாடல்கள் ஒப்பித்தல் போட்டியில் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரி மற்றும் உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
மேலும், ஆட்டோக்களில் பயணிகள் தவறவிட்ட பொருட்களை ஒப்படைத்த 10 சிறந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பண முடிப்பு மற்றும் நற்சான்று, பதக்கங்களை கருணாநிதி வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு கவிஞர் அப்துல் ரகுமான் தலைமையில் அண்ணா கவியரங்கம் தொடங்கியது.
இதில் சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்' என்ற தலைப்பில் கவிஞர் வாலி, நீதிதேவன் மயக்கம்' என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து, ஆரிய மாயை' என்ற தலைப்பில் கவிதைப்பித்தன், அண்ணாவின் உயில்' என்ற தலைப்பில் ஆண்டாள் பிரியதர்சினி, சாமானியர்கள் சகாப்தம்' என்ற தலைப்பில் கவிஞர் விவேகா, வெள்ளை மாளிகையில்' என்ற தலைப்பில் கவிஞர் யுகபாரதி ஆகியோர் பேசினர்.
மாலை 4 மணிக்கு புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி குழுவினரின் நாட்டுப்புற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு தி.மு.க. முப்பெரும் விழா - விருது வழங்கும் விழா தி.மு.க. பொதுச் செயலாளர் அமைச்சர் அன்பழகன் தலைமையில் நடக்கிறது.
காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர், அமைச்சர் தா.மோ.அன்பரசன் வரவேற்கிறார். தி.மு.க. தலைவர், முதல்வர் கருணாநிதிக்கு அண்ணா விருதினை பேராசிரியர் அன்பழகன் வழங்குகிறார்.
தொடர்ந்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு பெரியார் விருதும், குன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கு கலைஞர் விருதும், முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமிக்கு பாரதிதாசன் விருதும் வழங்கப்படுகிறது.
இறுதியாக முதல்வர் கருணாநிதி ஏற்புரை நிகழ்த்துகிறார். விழாவில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
அண்ணா வீட்டில் நின்ற கருணாநிதி...
முன்னதாக அண்ணா வாழ்ந்த வீட்டுக்கு சென்றார் கருணாநிதி. சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணாவின் வீடு தற்போது அரசு நினைவுச் சின்னமாக மாறியுள்ளது.
வீட்டிற்கு வந்த கருணாநிதி, காரில் இருந்தபடியே வீட்டின் முன்பு சிறிது நேரம் நின்று பழைய நினைவுகளில் மூழ்கினார். அதன் பின்னர் அங்கிருந்து அவர் கிளம்பிச் சென்றார்.
காஞ்சியில் கோலாகலம்...
முப்பெரும் விழாவையொட்டி காஞ்சிபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. மாநாடு போல கூட்டம் களை கட்டியுள்ளது. லட்சக்கணக்கான தொண்டர்கள் காஞ்சிபுரத்தில் குவிந்துள்ளனர்.
திமுக கொடிகள், தோரணங்கள், வரவேற்பு வளைவுகள் என நகரம் முழுவதும் திமுக வண்ணமாக காணப்படுகிறது.
இரட்டை மண்டபத்தில் இருந்து மூங்கில் மண்டபம் வரை அண்ணாவின் மார்பளவு சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. அண்ணா நினைவில்லமும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.