டெல்லியில் விஜயகாந்த் நாளை உண்ணாவிரதம்- குவியும் தொண்டர்கள்

விஜயகாந்த்துடன் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகளும் விமானம் மூலம் சென்றுள்ளனர். தேமுதிகவினரும் டெல்லியில் குவிந்து வருகின்றனர்.
நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை புதுடெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு விஜயகாந்த் தலைமை தாங்குகிறார். இந்த உண்ணாவிரதப் போராட்டத் தில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் விமானம் மற்றும் ரயில் மூலம் டெல்லிக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.
இன்று பிற்பகல் 1 மணி அளவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.
முன்னதாக இன்று காலை 7.15 மணிக்கு மாநில தொழிற் சங்க பேரவைத் தலைவர் வேல்முருகன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் சுமார் 60-க்கும் மேற்பட்டோர் சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு பயணமானார்கள்.
காலை 9.50 மணிக்கு சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்ட விமானத்தில் தென்சென்னை மாவட்ட செயலாளர் வி.என்.ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் டெல்லிக்கு சென்றனர். அதே போல் காலை 10.30 மணிக்கு டெல்லி சென்ற விமானத்தில் சுமார் 60-க்கும் மேற்பட்ட தேமுதிக நிர்வாகிகள் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.
அதேபோல, விழுப்புரம் மாவட்ட செயலாளர் எஸ்.வெங்கடேசன் தலைமையில் 250 பேர் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.
இதே போல் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் 150-க்கும் மேற்பட்டோர் இன்று காலை திருவனந்தபுரத்திலிருந்து டெல்லிக்கு புறப்பட்ட விமானங்களில் பயணமானார்கள்.
மேலும் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் இன்று காலை பெங்களூரிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்ற விமானங்களில் புறப்பட்டு சென்றனர்.
ஆயிரக்கணக்கில் தேமுதிகவினர் டெல்லியில் காலை முதலே குவிந்து வருகின்றனர். அவர்களை கல்யாண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் தங்க வைக்கும் பொறுப்பு மாநில இளைஞர் அணிச் செயலாளரும், விஜயகாந்த்தின் மச்சானுமான சுதீஷிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர டெல்லியில் உள்ள தேமுதிகவினரின் இல்லங்களிலும் தங்க வைக்கப்பட்டு வருகிறார்கள்.
தேமுதிகவினர் பெரும் திரளாக டெல்லி உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதலில் தனி ரயிலை இயக்க தென்னக ரயில்வேயை தேமுதிக அணுகியதாம். முதலில் தருவதாக கூறிய தென்னக ரயில்வே, பின்னர் யாரிடமிருந்து எந்த மாதிரியான உத்தரவு
வந்ததோ தெரியவில்லை, முடியாது என்று கூறி விட்டதாம்.
இருந்தாலும் விடாத தேமுதிக தலைமை, கட்சியினரை விமானங்கள் மூலம் டெல்லி வந்து குவியுமாறு கேட்டுக் கொண்டதால், அவர்களும் பல்வேறு நகரங்களிலிருந்து விமானம் மூலம் டெல்லியில் குவிந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications