லஷ்கர் தீவிரவாதியை கோடாரியால் வெட்டி கொன்ற ஜம்மு பெண்
ஜம்மு: லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதியை, ஜம்மு பெண் ஒருவர் கோடாரியால் வெட்டி கொன்று இந்திய பெண்களின் வீரத்தை காட்டியுள்ளார். காயமடைந்த மற்றொரு தீவிரவாதி தப்பியோடிவிட்டான்.
ஜம்மு & காஷ்மீர், ரஜவுரி மாவட்டத்தில் உள்ள தானா மாண்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் நூர் அகமது. அவரது மனைவி ரஷிதா பேகம்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணி அளவில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த இரண்டு தீவிரவாதிகள் அவர்களது வீட்டுக்குள் புகுந்தனர்.
அவர்கள் நூர் குடும்பத்தாரிடம் வெடிகுண்டு வைப்பதற்காக அப்பகுதியில் இருக்கும இரண்டு இடங்கள் குறித்து கேட்டுள்ளனர். ஆனால், அதற்கு அவர்கள் பதில் சொல்லவில்லை. இதையடுத்து அந்த தீவிரவாதிகள் நூர் குடும்பத்தாரை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், குடும்பத்தை ஒட்டுமொத்தமாக அழித்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.
அப்போது யாரும் எதிர்பாராத வகையில் ரஷிதா, ஒரு கோடாரியை எடுத்து ஒரு தீவிரவாதியை வெட்டியுள்ளார். அருகிலிருந்த அவனது மற்றொரு கூட்டாளியை அடுத்த கணத்தில் தாக்கினார். இதில் ஒரு தீவிரவாதி அந்த இடத்திலே பலியானார். மற்றொருவன் பலத்த காயங்களுடன் இருட்டில் சென்று மறைந்துவிட்டேன்.
இது குறித்து அப்பகுதி கூடுதல் எஸ்பி ஷபிர் அகமது கூறுகையில்,
இறந்த தீவிரவாதியின் பெயர் ஓசாமா என தெரிகிறது. அவன் பாகிஸ்தானில் இருந்து இயங்கும் லஷ்கர் தீவிரவாத இயக்கத்தின் தளபதி. பல தீவிரவாத வழக்குகளில் தேடப்பட்டு வந்தவன். மற்றொருவன் யார் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். பாதுகாப்பு படையினர் அவனை தேடி வருகின்றனர் என்றார்.