கேரளாவுக்கு அனுமதி - ஜெயராம் ரமேஷ் பேச்சுக்கு தமிழக காங். கடும் கண்டனம்
இதுகுறித்து அவர் கூறுகையில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம், கேரள அரசின் புதிய அணை தொடர்பான ஆய்வுப் பணிக்கு அனுமதி அளித்துள்ளது சரியானதுதான் என்று அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதை கடுமையாக கண்டிக்கிறோம்.
இந்த விவகாரம் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. ஆனால் இதைப் புறக்கணித்து விட்டு அனுமதி அளித்துள்ளார் ஜெயராம் ரமேஷ். மேலும், ஆய்வுப் பணியை புதிய அணை கட்டுவதற்காகவே கேரளா மேற்கொள்கிறது என்பதையும் அவர் அறியத் தவறி விட்டார்.
மேலும், தமிழ்நாடு, கேரள மாநிலங்களுக்கு இடையிலான இந்தப் பிரச்சினை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, உணர்ச்சிகரமானது என்பதையும் அவர் அறியத் தவறியுள்ளார்.
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இப்படி ஆய்வு நடத்த அனுமதித்திருப்பது மிகவும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்.
கேரள அரசுக்கு மத்திய அரசு அளித்துள்ள இந்த அனுமதியால் தமிழகத்தின் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பெரும் கொதிப்படைந்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஏ.ராசா, ஜெயராம் ரமேஷை சந்தித்து புகார் மனு கொடுத்து விளக்கிக் கூறியபோதும் ரமேஷ் அமைதி காத்துள்ளார். இது போதாதென்று, ஏற்கனவே காயப்பட்டுக் கிடக்கும் தமிழகத்தை மேலும் வேதனைக்குள்ளாக்கும் வகையில், அனுமதி அளித்தது சரியே என்றும் அவர் பேசியுள்ளார்.
மிகவும் முக்கியமான இந்த விவகாரத்தில் தொடர்ந்து முரண்பாடாகவே பேசி வருகிறார் ஜெயராம் ரமேஷ். கேரளாவில் உள்ள இடதுசாரி அரசுக்கு ஆதரவாக ஜெயராம் ரமேஷ் செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது. இதை விளக்க வேண்டியது அவரது கடமை.
மேலும், உடனடியாக கேரள அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இதைச் செய்ய ஜெயராம் ரமேஷ் தவறுவாரேயானால், இந்த விவகாரத்தை சோனியா காந்தியிடம் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கொண்டு செல்வார்கள். அவரது தலையீட்டைக் கோருவார்கள் என்று கூறியுள்ளார் சுதர்சனம்.