For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேரளாவின் புதிய அணை - எதிர்த்து 5ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட முயலும் கேரளாவைக் கண்டித்தும், இதுதொடர்பாக மெளனம் சாதித்து வரும் திமுக அரசைக் கண்டித்தும் அக்டோபர் 5ம் தேதி தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கைப் பிரச்சனையை வெளிநாட்டுப் பிரச்சனை என்று சொல்லி கண்டும் காணாமல் இருந்து விட்டார் கருணாநிதி. முல்லைப் பெரியாறு பிரச்சனை உள்நாட்டுப் பிரச்சனை தானே! உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது ஏற்கனவே இது குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நடை முறைப்படுத்தாமல் அதற்கு முற்றிலும் நேர்மாறான செயலை செய்ய மத்திய அரசு எப்படி முன் வந்தது? இது நீதிமன்ற அவமதிப்பு ஆகாதா?

மத்திய அரசு தான் கருணாநிதியின் கடிதத்தை கண்டு கொள்ளவில்லை என்றால், மத்திய அரசின் நடவடிக்கை குறித்து உச்ச நீதிமன்றத்தில் திமுக அரசு முறையிட்டதா? மத்திய அரசின் அனுமதிக்கு உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற திமுக அரசு முயற்சிக்க வேண்டாமா? மத்திய அரசில் அங்கம் வகிக்காத கேரள அரசு மத்திய அரசிடம் இருந்து அனுமதியை பெறுகின்ற போது மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கருணாநிதி அந்த அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க முடியாதா? தமிழகத்தின் நியாயமான கோரிக்கைக்கு கூட செவி சாய்க்க மறுக்கும் மத்திய அரசில் ஒட்டிக் கொண்டிருப்பது கருணாநிதிக்கு வெட்கமாகத் தெரியவில்லையா!

ஆய்வுக்குப் பின்னர் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை படிப்படியாக 152 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் 2006ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இது எனது ஆட்சிக் காலத்தில் உள்ள நிலைமை!

எனவே முல்லைப் பெரியாறு அணை பகுதியில் புதிதாக அணை கட்டுவதற்கான பணிகளை மேற் கொண்டிருக்கும் கேரள அரசையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி நியாயமற்ற முறையில் ஆய்வு நடத்த அனுமதி அளித்திருக்கும் மத்திய அரசையும்,

இதை தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல் தமிழகத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வரும் மத்திய அரசில் வெட்கமே இல்லாமல் அட்டைப் போல் ஒட்டிக்கொண்டிருக்கும் சுயநலவாதி திமுக அரசின் முதலமைச்சர் கருணாநிதியையும் கண்டிப்பதோடு மட்டுமல்லாமல் தமிழகத்தின் நலனை முன்னிட்டு கேரள அரசிற்கு கொடுக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும், தமிழகத்திற்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற வலியுறுத்தியும் அதிமுக தேனி மாவட்டக் கழகத்தின் சார்பில் 5.10.2009 திங்கட்கிழமை அன்று காலை 10 மணி அளவில், உத்தமபாளையம் தோடி திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக மாணவர் அணிச் செயலளர் ஆர்.பி. உதயகுமார் தலைமையிலும், தேனி மாவட்டக் கழகச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் முன்னிலையிலும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X