10 இலங்கைத் தமிழர்கள் தமிழகத்தில் தங்க அனுமதி மறுப்பு!
சென்னை: செங்கல்பட்டு, பூந்தமல்லி உள்ளிட்ட முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் 10 இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் தமிழ்நாட்டில் தொடர்ந்து தங்க தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. அவர்கள் மீதான வழக்குகள் முடிவடைந்ததும் வேறு நாட்டுக்கு அவர்கள் போய் விட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த பத்து பேரும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்றும், தேசிய பாதுகாப்பு கருதி இவர்கள் தமிழ்நாட்டில் தங்க அனுமதி மறுக்கப்படுவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டு முகாம்களில் 64 இலங்கைத் தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இந்த பத்து பேரும் அடங்குவர். விடுதலைப் புலிகளுக்கு ஆயுதக் கொள்முதல் செய்தது, தகவல் தொடர்பு சாதனங்களை வாங்கிக் கொடுத்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக இவர்கள் இந்த சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது இவர்களில் குறிப்பிட்ட 10 பேர் தமிழகத்தில் நிரந்தரமாக தங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சட்டம் ஒழுங்கு டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த பத்து பேரும் வழக்குகள் முடிந்ததும் அவரவர் விரும்பும் நாடுகளுக்குச் செல்லலாம் என தமிழக அரசு அனுமதித்திருந்தது. ஆனால் இவர்கள் இந்தியாவிலேயே தங்க விரும்புவதாக தெரிவித்திருந்தனர். ஆனால் தேசிய பாதுகாப்பு கருதி அந்தக் கோரிக்கையை ஏற்க இயலாத நிலை உள்ளது.
இந்த முகாம்களில் இருந்த 45 பேர் கடந்த மூன்று மாதங்களில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வயது மற்றும் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களை வழக்கமான முகாம்களுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications