பெரியாறு அணை அருகே புதிய அணைக்கான ஆய்வுக்கு அனுமதி - தமிழகம் வழக்குப் பதிவு
சென்னை: முல்லைப் பெரியாறு அணை அருகே கேரளா புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுக்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
கேரளாவின் புதிய அணை தொடர்பான ஆய்வுக்கு அனுமதி அளிக்கப்பட்டது தொடர்பாக சர்ச்சை வெடித்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதை உறுதி செய்த தமிழக அரசு இதை எதிர்த்து வழக்கு தொடரப்படும் என அறிவித்தது.
இந்த நிலையில், நேற்று, தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுகுறித்து மிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முதல்வர் கருணாநிதி, முல்லை பெரியாறில், கேரள அரசு புதிய அணை கட்டுவது தொடர்பாக ஆய்வுப் பணிகளை தமிழக அரசை கலந்தாலோசிக்காமல், எவ்வித முடிவும் எடுக்கக் கூடாது என்று மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அவர்களை 22.9.2009 நாளிட்ட கடிதத்தின் மூலம் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி ஆ.ராசா, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரி அவர்களை சந்தித்து, கேரள அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்திய பிறகும், மத்திய அரசு இதற்கான அனுமதியை 6.10.2009-ல் வழங்கியுள்ளது.
இதனை எதிர்த்து, தமிழக அரசு மத்திய அரசு அணைக்கான ஆய்வு நடத்த அனுமதி அளித்ததற்கு தடை விதிக்க கோரியும் மற்றும் கேரள அரசு ஆய்வு மற்றும் சர்வே பணிகளை மேற்கொள்வதை தடுத்து நிறுத்த கோரியும் மனு ஒன்றினை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications