இலங்கைக்கு திமுக கூட்டணிக் குழு - மிகப் பெரிய நாடகம்: ராமதாஸ், வைகோ
சென்னை: காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்தவர்களை மட்டும் அடங்கிய எம்.பிக்கள் குழுவை இலங்கைக்கு அனுப்பி இருப்பது கண் துடைப்பு நாடகம். இதை கண்டிக்கிறோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கூறியுள்ளனர்.
சென்னையில் இன்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க உயர் நிலைக் குழுக் கூட்டம் நடந்தது. இதில், ராமதாஸ், வைகோ, நல்லகண்ணு, பழ. நெடுமாறன், ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் பழ.நெடுமாறன், ராமதாஸ், வைகோ, நல்லக்கண்ணு ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
3 நாள் பிரசார பயணம்...
அப்போது அவர்கள் கூறுகையில்,
இலங்கையில் முள்வேலி முகாம்களில் வைக்கப்படும் ஈழத்தமிழர்களை மீட்க தமிழகம் முழுவதும் வருகிற 27-ந் தேதி முதல் 3 நாட்கள் பிரசார பயணம் நடைபெறும்.
சென்னையில் இருந்து தொடங்கும் பயணத்தை டாக்டர் ராமதாஸ் தொடங்கி வைக்கிறார். ராமேசுவரத்தில் இருந்து புறப்படும் பயணத்தை வைகோ தொடங்கி வைப்பார். ஊட்டியில் இருந்து பழ.நெடுமாறனும், கன்னியாகுமரியில் இருந்து தா.பாண்டியனும் பிரசார பயணங்களை தொடங்கி வைக்கிறார்கள்.
4 குழுவினரும் 9-ந்தேதி திருச்சி வந்தடைவார்கள். அன்று மாலை திருச்சியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறும். இதில் அனைத்து தலைவர்களும் கலந்து கொண்டு பேசுவார்கள்.
யாருக்கும் சொல்லாமல் இலங்கைக்குக் குழு...
இலங்கைக்கு எம்.பி.க்கள் குழு செல்வது பற்றி அரசு சார்பில் யாருக்கும் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
இலங்கைக்கு செல்லும் குழுவினரை அந்த நாட்டின் மறுவாழ்வு துறை அமைச்சர் அழைத்து செல்வதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
டக்ளஸ் அடியாட்கள் நடத்தும் முகாம்...
வவுனியாவில் இருக்கும் 30 முகாம்களில் மானிக் பார்ம் என்ற ஒரே ஒரு முகாமுக்கு மட்டும் அழைத்து செல்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் டக்களஸ் தேவானந்தம் அடியாட்கள் நடத்தும் முகாமுக்கு அழைத்து செல்கிறார்கள்.
முழுக்க, முழுக்க தமிழர்களை கொன்று குவிக்க ஆயுத உதவி செய்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தமிழக மக்களின் வேதனைகளுக்கு பிராயச்சித்தம் தேட, செய்த துரோகத்தை மறைக்க கூட்டணி கட்சிகள் பிரதிநிதிகளை மட்டும் அனுப்புகிறார்கள்.
கண்காணிப்பு குழு என்பது விடுபட்ட இடங்களை சென்று பார்க்க வேண்டும். ஆனால் சர்வதேச நீதி மன்றத்தில் குற்றவாளிகளாக நிறுத்தப்பட வேண்டிய ராஜபக்சேவின் அழைப்பை ஏற்று அவரிடம் கேட்டு விட்டு வருவதற்கு இந்த குழு செல்கிறது.
தமிழ்நாட்டில் சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் தனி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள ஈழ தமிழ் அகதிகளில் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள், குற்றச்சாட்டுகள் இல்லாதவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்.
காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகளின் எம்.பி.க்களை மட்டும் இலங்கை செல்லும் குழுவில் அனுப்பி இருப்பது பாராளுமன்ற ஜனநயாக மரபுகளுக்கு எதிரானது. பாராளு மன்றத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளடக்கிய குழுவை அனுப்பாவிட்டால் உண்மைகளை கண்டறிய முடியாது.
காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்தவர்களை மட்டுமே அனுப்பி இருப்பது கண்டு துடைப்பு நாடகம். இதை கண்டிக்கிறோம் என்று கூறினர்.
இன்று இரவு பொதுக் கூட்டம்...
இந்த நிலையில், இலங்கையில் முள்வேலியில் அடைபட்டு இருக்கும் தமிழர்களை காப்பாற்ற கோரியும், அவர்கள் மீண்டும் தங்களது இருப்பிடத்திற்கு திரும்ப நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தியும் சென்னை மயிலை மாங்கொல்லையில் இன்று இரவு பொதுக்கூட்டம் நடக்கிறது.
இக்கூட்டத்திற்கு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமை தாங்குகிறார்.
டாக்டர் ராமதாஸ் , வைகோ, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன் மற்றும் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.